Skip to main content

“ஆளுநரை கண்டித்து தமிழக மக்கள் போராட வேண்டிய நிலை வரும்” - முத்தரசன் 

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

CPI Mutharasan addressed press in trichy

 

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க மாநிலத் தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பாஸ்கர், துணைத் தலைவர்கள் மாரிமுத்து எம்.எல்.ஏ., பத்மாவதி, வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு பேசினார்.

 

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், “நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாத காரணத்தினால் நாளுக்கு நாள் விலைவாசி உயருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக நடந்த ஆட்சியில் பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியதை நிறைவேற்றவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக பல நிறுவனங்கள் மூடப்பட்டது. இதனால் பல லட்சம் பேர் வேலை இழந்தனர்.

 

மதக் கலவரம் மூலமாக மக்களை பிளவுபடுத்தி பா.ஜ.க.வினர் அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். தற்போது மொழியை கையில் எடுத்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி செல்லும் இடங்களில் எல்லாம் ஊழல், குடும்ப அரசியல் என்று பேசுகிறார். அவர் செய்த திட்டம் பற்றி பேச முடியவில்லை. மத்திய தணிக்கை குழு வெளியிட்ட தகவலின்படி மத்திய அரசு பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது. இதைக் கண்டித்து வருகிற செப்டம்பர் மாதம் 12-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், 13-ந் தேதியும், 14-ந் தேதியும் நகர, ஒன்றியங்கள் அளவில் மறியல் போராட்டமும் நடத்தப்படும்.

 

தமிழக கவர்னர் ரவி, தமிழக அரசுக்கு எதிராகச் செயல்பட்டு அரசியல் செய்கிறார். டி.என்.பி.எஸ்.சி. தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமனத்துக்கான கோப்புகளை திருப்பி அனுப்புகிறார். டி.என்.பி.எஸ்.சி.யில் தலைவர் நியமிக்கப்பட்டால்தான், தகுதியான நபர்களுக்கு வேலை கிடைக்கும். கவர்னர் ரவி ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவரைப் போல செயல்படுகிறார் என்று ஜனாதிபதியிடம் தமிழக எம்.பி.க்கள் புகார் மனு வழங்கியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கவர்னர் ரவி போட்டி அரசாங்கம் நடத்துகிறார். கவர்னரை கண்டித்து பல கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. விரைவில் மக்கள் நலன் கருதி தமிழக மக்களே கவர்னரை கண்டித்து போராட வேண்டிய நிலை வரும்.

 

காலை உணவு விரிவுபடுத்தும் திட்டத்தை வருகிற 25-ந் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்துக்கு கட்சி பாகுபாடின்றி அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் அந்தந்த மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் கடிதம் அனுப்பி உள்ளார். அவரின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.

 

தமிழக மீனவர்கள் உயிருக்கும், பொருட்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இலங்கைக்கு இந்தியாவும், தமிழகமும் தொடர்ந்து உதவுகிறது. ஆனால், இலங்கை கடற்படையும், இலங்கை கடல் கொள்ளையர்களும் தமிழக மீனவர்களைத் தாக்குவதும், அவர்களது படகு, வலை உள்ளிட்டவற்றை கொள்ளை அடித்துச் செல்வதை மத்திய அரசு தடுத்து நிறுத்தி, மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

 

நீட் தேர்வை காங்கிரஸ் அரசு கொண்டு கொடுத்ததாகவும், கச்சத்தீவை இந்திரா காந்தி கொடுத்தாகவும் கூறுகிறார்கள். இதையெல்லாம் சரிசெய்ய வேண்டும் என்றுதானே பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. எனவே மாநிலங்களின் தேவையை அறிந்து தற்போதைய மத்திய அரசு செயல்பட வேண்டியது கடமை என்பதை உணர வேண்டும். அ.தி.மு.க. மாநாட்டில், நீட் தேர்வு விலக்கு பெற தி.மு.க. அரசு முயலவில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலும் நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு பெற, அப்போதைய அமைச்சர் விஜயபாஸ்கர் போன்றோர் பலமுறை மத்திய அரசை அணுகினர். அதுபோல, தி.மு.க. அரசும் முயன்று வருவதை உணர வேண்டும். நீட் தேர்வு பொது பிரச்சனை. அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

 

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கர்நாடக மாநிலம் வறட்சி காலத்தில் எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்று வழிகாட்டி உள்ளதோ, அதன்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். தி.மு.க. கூட்டணியில் எந்தவித சலசலப்பும் இல்லை. பலமாகத்தான் உள்ளது. அதனால் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மோடியின் நாய்க்குட்டிபோல் அமலாக்கத்துறை செயல்படுகிறது” - முத்தரசன்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Mutharasan criticism of BJP

புவனகிரி பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் சிதம்பரம் நாடளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டி பானைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

அப்போது பேசிய அவர், “அமலாக்கத்துறை மோடியின் நாய்க்குட்டி போல செயல்படுகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அபராதம் விதித்துள்ளனர். சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை மோடி, அமித்ஷா ஆட்டி படைக்கிறார்கள். மோடி, தேர்தலுக்குப் பிறகு திராவிட முன்னேற்ற கழகம் இருக்காது என கூறுகிறார். உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை அழித்து விடுங்கள் என கூறுகிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்து பாரதிய ஜனதா கட்சியை மட்டும் வைத்துக்கொண்டு சர்வாதிகாரி போல் செயல்படுவதற்காக அனைத்து கட்சிகளையும் ஒழிக்க திட்டமிட்டுள்ளார்.

மோடியின் தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையுமே செய்யவில்லை. விவசாயிகளுக்கு ஆதார விலை, சாமிநாதன் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. தற்போது கச்சத்தீவைப் பற்றி பேசுகிறார். கச்சத்தீவை கடந்த 10 ஆண்டுகளில் மீட்பதற்கான மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை அவர் யாருக்கு பேன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதனை திமுக, கம்யூனிஸ்ட் பிரச்சினையாக பார்க்காமல் பொது பிரச்சினையாக பார்க்க வேண்டும்.  மோடியிடம் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது. அப்படி சமூக நீதி அவர்களுக்கு இருந்தால், இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிறேன் என கூறியதால் வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்திருக்கமாட்டார்கள்.

பாஜக பத்தாண்டுகளில் செய்த தவறு கொஞ்ச நஞ்சமல்ல. சிறுபான்மை மக்களுக்கு எதிராக, சிறு குறு தொழில் நடத்துபவர்களுக்கு எதிராக, விவசாயிகளுக்கு எதிராக 3 சட்டங்கள் நிறைவேற்றினார்கள். தொழிலாளர்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வந்தார்கள்.

இதற்கு அதிமுக ஆதரவளித்தது. தற்போது ஜனநாயகத்தை காப்போம் என  ஏமாற்று வேலை செய்கிறது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு பானைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இவருடன் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் மணிவாசகம்,  மாவட்டச் செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் சேகர், வட்டச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Next Story

“இந்திய அளவில் சமூக நீதி காப்பாற்றப்பட வேண்டும்” - பாஜகவை விளாசிய து.ராஜா

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cpi National Secretary D. Raja has severely criticized the BJP

தமிழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கடி வருவதற்கு வெட்கப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த து.ராஜா, “அகில இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இது மாறி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் பாஜக நாசகார செயலில் ஈடுபட்டு வருவதால் இந்தியா ஒரு ஜனநாயக குடியரசாக நீடிக்குமா என்ற கேள்வி எழுகிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக, மக்கள் நலன் காத்திட, மாநில உரிமைகளை மதித்து செயல்படுகிற ஒன்றிய அரசாக இந்தியா தொடர்ந்து நீடிக்குமா? என்ற கேள்வியும் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் தான் இந்தத் தேர்தலை எல்லோருமே முக்கியமான தேர்தலாக கருதுகிறோம்.

பாஜகவை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும். மதவெறி பாசிசத்தை இந்தியாவில் நிலை நிறுத்த வேண்டும் எனவும், மதச்சார்பற்ற நாடு என்ற நிலையை மாற்றி மதவாத நாடாக்க முயன்று வருகிறது.  சட்ட நெறிகளை எல்லாம் அழித்து ஒழித்து விட்டு ஏற்றத்தாழ்வுகளை அப்படியே கட்டி காப்பாற்ற வேண்டும். ஆர்எஸ்எஸ் அஜண்டாவை நிறைவேற்றுகிற ஒரு கட்சியாக தான் பாஜக செயல்படுகிறது. இதற்கு பிரதமராக மோடி செயல்படுகிறார்

மோடி தமிழ்நாட்டுக்கு தற்போது அடிக்கடி வருகிறார். அவர் பிரதமர் என்ற முறையில் தேர்தல் காலத்தில் மக்களின் வாக்குகளைப் பெற வருவதற்கு வெட்கப்பட வேண்டும்.  தமிழ்நாடு பல பேரிடர்களை சந்தித்தபோதெல்லாம் மோடி வரவில்லை. தமிழ்நாட்டின் மீது அக்கறை இல்லை, நிவாரண நிதி கூட கொடுக்கவில்லை.

இந்தியாவில் முன்பிருந்ததை  விட அந்நிய கடன் அதிகரித்துள்ளது. இது பற்றி மோடி பொது வெளியில் விவாதிக்க தயாரா?  மோடி ஆட்சியில் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ச்சி பெற்று இருக்கிறார்கள். மக்களுக்கு  வளர்ச்சி இல்லை.  மோடியின் அரசு மக்கள் விரோத அரசாக நாட்டு நலனில் அக்கறை இல்லாத ஒரு அரசாக, பெரு முதலாளிகளின் எடுபிடி அரசாக மாறிவிட்டது.  மதச்சார்பின்மையை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணியில் இருக்கிற கட்சிகள் தொடர்ந்து போராடுகிறோம். இந்தத் தேர்தல் களத்தில் மக்களிடம் வாக்கு கேட்கின்றோம்.

பாட்டாளி மக்கள் கட்சி பாஜகவோடு  அணி சேர்ந்து இருப்பது பெரிய துரோகம். பாட்டாளிகள் என்று சொல்லிக்கொண்டு பாஜகவோடு சேர்வது எவ்வளவு பெரிய கொள்கை மோசடி, துரோகம் என்பதை இன்றைக்கு மக்கள் கேட்கிறார்கள்.  அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருக்கிற அதிமுக தமிழர்களின் உரிமைகளை மீட்போம் என்கிறார்கள். தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட போது இவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? மோடியை ஆட்சியில் இருந்து அகற்றவேண்டும் என்று எடப்பாடி பேசுவாரா?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தியாவை காத்திட, பாசிசத்தை வீழ்த்திட  ஸ்டாலின் அழைக்கிறேன் என்று குரல் கொடுத்து இருக்கிறார். அது அவருடைய குரல் மட்டுமல்ல,  தமிழ்நாடும் இந்தியாவும் ஒன்று பட்டு முன்னேற வேண்டும் என்று விரும்புகிற எல்லோரும் எழுப்புகிற குரல்.  இந்தியாவைக் காத்திட பாசிசத்தை வீழ்த்திட நாம் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும்.  ஒன்றுபட்டு போராட வேண்டும். இந்தப் பின்னணியில் தான் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்திய அளவில் சமூக நீதி காப்பாற்றப்பட வேண்டும், ஜாதியை உடைத்து தகர்த்தெறிய வேண்டும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று  போராடுகிற முன் களப்போராளியாக தொல்.திருமாவளவன் இருக்கிறார். எனவே அவருக்கு சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் வாக்களிக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்” என்றார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, சிபிஐ மாநில கட்டுப்பாட்டுக் குழு மணிவாசகம், மாநில நிர்வாகக் குழு மருத்துவர் ரவீந்திரநாத், மாநிலக்குழு மருத்துவர் சாந்தி, மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் வி.எம் சேகர், வட்டச் செயலாளர் தமீம் முன் அன்சாரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.