Skip to main content

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட சேலம் மாவட்ட ஆட்சியர்; இதுவரை 11 ஆயிரம் பேருக்குப் போட்டாச்சு!!

Published on 04/02/2021 | Edited on 04/02/2021

 

covidshield vaccinated to Salem District Collector

 

சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், புதன்கிழமை (பிப். 3) சேலம் அரசு மருத்துவமனையில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டார். இம்மாவட்டத்தில் இதுவரை 11452 முன்களப்பணியாளர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 

கரோனா வைரஸ் தொற்றில் இருந்து காத்துக்கொள்ள, கோவிஷீல்டு எனும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், இதரப் பணியாளர்கள் என முன்களப் பணியாளர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில், கடந்த ஜனவரி 16ம் தேதி இத்தடுப்பூசி போடும் முகாம் தொடங்கப்பட்டது.

 

இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் புதன்கிழமை (பிப். 3) செய்தியாளர்களிடம் கூறியது, “சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனை, எடப்பாடி அரசு மருத்துவமனை, ஆத்தூர் அரசு மருத்துவமனை, ஓமலூர் அரசு மருத்துவமனை மற்றும் தம்மம்பட்டி, தலைவாசல், காரிப்பட்டி, பனமரத்துப்பட்டி, மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம், காடையாம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 12 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி வழங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, 20 தனியார் மருத்துவமனைகளிலும் இந்தத் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன.

 

சேலம் மாவட்டத்தில், முதல்கட்டமாக கோவிஷீல்டு தடுப்பூசி 52,800 டோஸ் வரப்பெற்று, குளிர்பதனக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி வழங்கும் மருத்துவமனைகளுக்குத் தேவையான அளவு டோஸ்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுகிறது.

 

சேலம் சுகாதார வட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் 20,794 முன்களப்பணியாளர்கள், ஆத்தூர் சுகாதார வட்டத்தில் 5,524 முன்களப்பணியாளர்கள் என மொத்தம் 26,318 பேருக்கு முதல்கட்டமாக கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 

கடந்த ஜன. 16 ம் தேதி முதல் பிப். 2ம் தேதி வரை மொத்தம் 32 கோவிஷீல்டு தடுப்பூசி போடும் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் சேலம் மற்றும் ஆத்தூர் சுகாதார வட்டங்களில் மொத்தம் 11,452 முன்களப்பணியாளர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வருவாய்த்துறை ஊழியர்கள் 1,384 பேருக்கு இத்தடுப்பூசி போடுவதற்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி குறித்து மக்களிடையே வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

 

நானும் கோவிஷீல்டு தடுப்பூசி இன்று போட்டுக்கொண்டேன். அனைவரும் இத்தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்கள் தீவிர கண்காணிப்புடனும், விழிப்புடனும் நடத்தப்பட்டு வருகிறது.” இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிகரிக்கும் கொரோனா தொற்று; மீண்டும் தொடங்கிய தடுப்பூசி உற்பத்தி!

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

covid infection increased again started covershield vaccination 

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகள் கொரோனாவை தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவனம் கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியான கோவிட்ஷீல்டை உற்பத்தி செய்து வந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்ததால் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தடுப்பூசி உற்பத்தி செய்வதை நிறுத்தியது.

 

தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் மீண்டும் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக சீரம் நிறுவனத்தின் சிஇஓ அடார் பூனவல்லா தெரிவித்துள்ளார். 


 

Next Story

அதிகரிக்கும் கொரோனா தொற்று; திருச்சியில் 7 கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

covid infection increased trichy womens admitted government hospital

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் கொரோனாவை தடுப்பதற்கான தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

அதன் ஒரு பகுதியாக, திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரு தலைமையில் செயல்படும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் தற்போது 42 படுக்கைகள் உள்ளன. மொத்தம் 330 ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன. 320 மருத்துவர்கள், 230 செவிலியர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் தயார் நிலையில் உள்ளனர். தற்போது திருச்சி மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினமும் 300க்கும் அதிகமானோர் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

 

தற்போது இந்த சிகிச்சை மையத்திற்கு உள்ளேயே ஆர்டிபிசிஆர் சோதனை செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. போதுமான மருந்துகளும் கையிருப்பு உள்ளது. எனவே, திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா தொற்றை கண்டு யாரும் அச்சப்படத் தேவையில்லை. அதை எதிர்கொள்ள திருச்சி அரசு மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது என்று மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 7 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட ஒன்பது பேர் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அனைவரும் நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக டீன் நேரு கூறியுள்ளார்.