குற்றாலத்தில் நடப்பு சீசனில் முதன்முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தற்போது மேற்கு தொடர்ச்சி மலைகளில் நல்ல மழைப்பொழிவு இருப்பதால் குற்றாலம் அருவிகளில் நீர்ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் குற்றாலம் அருவிகளில் நல்ல நீர்வரத்து இருக்கும். மெயில் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் பலரும் வந்து குவிந்தவண்ணம் இருப்பர். மூன்று மாதங்களில் மட்டும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து செல்வர்.
ஆனால் தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் சுற்றுலாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் யாரும் வருவதில்லை. பெரும்பாலும் குற்றால சீசனை மட்டுமே நம்பி தங்கும் விடுதிகளும் உணவகங்களும் நடத்தும் பலரது வாழ்வாதாரமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்கு தொடர்சி மலைப்பகுதியில் பெய்யும் மழை காரணமாக இந்த சீசனில் முதல் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சாரல் மழை பொழிந்துகொண்டே இருப்பதால் குற்றால அருவிகளில் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்போதும் தலைகளெனக் காட்சி தரும் குற்றால அருவிகள் தற்போது 4 மாதங்களாக மனித நடமாட்டமற்று இருக்கிறது.