ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிவிட்ட வழக்கு; நீதிமன்றம் தீர்ப்பு!

hemaraj-judgement

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணியாக இருந்த பெண் கோயம்புத்தூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இத்தகைய சூழலில் தான் இவர் கடந்த பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி (06.02.2025) மதியம் கோவை - திருப்பதி இன்டர்சிட்டி ரயிலில் சொந்த ஊருக்குப் பயணம் மேற்கொண்டார். பெண்கள் பெட்டியில் பயணித்துக் கொண்டிருந்த அவருக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதோடு திடீரென கே.வி. குப்பம் அருகே ஓடும் ரயிலில் இருந்து அப்பெண்ணை அந்த இளைஞர் கீழே தள்ளிவிட்டார். 

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கர்ப்பிணிப் பெண் கழிவறைக்குச் சென்றபோது அங்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாகவும், இதனால் கூச்சலிட்டதால் அந்த இளைஞர் ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணிப் பெண்ணைக் கீழே தள்ளியது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த கே.வி. குப்பம் காவல்துறையினர், ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் வேலூர் அடுக்கம்பாளையம் அரசு மருத்துவக் கல்லூரியில் அப்பெண்ணைச் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கை மற்றும் கால் உள்ளிட்ட இரண்டு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

அதே சமயம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் இவர் கே.வி. குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. ஹேமராஜ் ஏற்கனவே செல்போன் பறித்த வழக்கில் கடந்த 2022ஆம் ஆண்டு குண்டர் சட்டத்தில் கைதானவர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியிருந்தது. இத்தகைய சூழலில் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை (சிசு) உயிரிழந்தது. இதனையடுத்து இறந்த சிசு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. 

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமராஜை குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளார். மேலும் ஹேமராஜூக்கான தண்டனை விவரங்கள் வரும் 14ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். 

court judgement Pregnant woman ranipet TIRUPPATUR Train
இதையும் படியுங்கள்
Subscribe