Skip to main content

27 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த நீதிமன்றத் தீர்ப்பு! 

Published on 22/04/2021 | Edited on 22/04/2021

 

Court verdict after 27 years!

 

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ். இவர் கடந்த 1994-ம் ஆண்டு விருத்தாசலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சுமார் 52 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஒரு முந்திரி தோட்டத்தை டெண்டர் மூலமாக ரூபாய் ஒரு லட்சம் கொடுத்து உறுதிமொழி பத்திரம் எடுத்துள்ளார். இந்நிலையில் வனத்துறை அதிகாரிகள் செல்வராஜை சரிவர முந்திரி தோட்டத்தில் உற்பத்தி செய்வதற்கு அனுமதிக்காமல் இருந்துள்ளனர். இதனால் கடந்த பல வருடங்களுக்கு முன்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் செல்வராஜ் திருச்சி கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு வன அலுவலகத்திற்குச் சென்று தனக்கு வரக்கூடிய நிலுவைத் தொகையை வசூல் செய்யும் விதமாக ஜப்தி செய்து கொள்ளலாம் என்று தீர்ப்பு வந்தது.

 

இதனால் இன்று காலை 10 மணிக்கு செல்வராஜ் மற்றும் ஸ்ரீரங்கம் நீதிமன்ற ஊழியர் செல்வம் உட்பட பலர் திருச்சி கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள வன அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது ஜப்தி செய்வதற்காக உள்ளே இருந்த ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயரதிகாரிகள் இல்லாத காரணத்தினால் இன்று ஒரு நாள் கால அவகாசம் கொடுங்கள் நாளை அதிகாரி வந்தவுடன் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறினர். 

 

இதையடுத்து செல்வராஜ் கூறுகையில்,  ''நான் முந்திரி பருப்புகளை சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தேன். அதற்காக ஆண்டிமடம் அருகே உள்ள ஒரு இடத்தை டெண்டர் மூலம் ஏலம் எடுத்தேன். ஆனால் சிறிது காலம் கூட என்னால் அந்த தொழிலை அந்த இடத்தில் மேற்கொள்ள முடியவில்லை. இதனால் நான் கட்டிய பணத்தை திரும்பச் செலுத்துமாறு கேட்டேன். அதிகாரிகள் மறுத்தனர். இதனால் நான் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு கடந்த 27 வருடமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த வழக்குக்காக போராடிக் கொண்டிருக்கிறேன். 2014 ஆம் ஆண்டு தீர்ப்பு வந்தது. அதன் தொடர்ச்சியாக 2016ல் ஜப்தி செய்து கொள்ளலாம் என்று தீர்ப்பு வந்தது. அப்போது பேச்சுவார்த்தை நடத்தி என்னை திருப்பி அனுப்பி வைத்துவிட்டார்கள். உயரதிகாரிகள் வன அலுவலகத்தில் இல்லை. அதனால் ஊழியர்கள் எங்களை நாளை காலை வருமாறு கூறினர். அதை ஏற்று நாங்களும் இன்று சென்றுவிட்டு நாளை காலை மறுபடியும் வந்து ஜப்தி செய்வோம் என்று கூறியுள்ளேன்'' இவ்வாறு தெரிவித்தார். இதனால் திருச்சி கம்பரசம்பேட்டை வன அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்