
வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி 13 முறை சம்மன் அனுப்பியும் கண்டுகொள்ளாத காவல்துறை ஆய்வாளருக்கு அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்து சேந்தமங்கலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி காவல்நிலையத்தில், கடந்த 2018ம் ஆண்டு மாதையன் என்பவர் எஸ்.ஐ. ஆக பணியாற்றி வந்தார். அப்போது, அந்தப் பகுதியில் நடந்த அடிதடி வழக்கில், விசாரணை அதிகாரியாக இருந்தார். இந்த வழக்கு விசாரணை, தற்போது சேந்தமங்கலம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
அதன்பிறகு மாதையன், ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று வெவ்வேறு ஊர்களுக்கு மாறுதலில் சென்று விட்டார். தற்போது அவர், கோயம்பத்தூர் மாவட்டம் சூலூர் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், அடிதடி வழக்கில் அரசுத் தரப்பில் சாட்சியமளிக்க நேரில் ஆஜராகும்படி 13 முறை ஆய்வாளர் மாதையனுக்கு சம்மன் அனுப்பியும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்து நீதித்துறை நடுவர் ஹரிஹரன் மே 25ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.