Court custody order for anjalai

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

Advertisment

இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் 14.07.2024 அன்று அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மீதமுள்ள 10 பேர் பூவிருந்தவல்லி தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். அதே சமயம் இந்த கொலை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த கொலை தொடர்பாக பாஜகவினுடைய வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியிலிருந்த அஞ்சலை என்பவரை போலீசார் தேடிவந்தனர்.

Advertisment

இதற்கிடையே பாஜகவின் வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியில் இருந்து அஞ்சலை நீக்கப்படுவதாக கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனையைடுத்து ஆம்ஸ்ட்ராங் வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலைக்கு ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அஞ்சலை புழல் சிறையில் அடைக்கப்பட்டார், ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.