கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள் எவ்வளவு ஆக்கிரமிப்பில் உள்ளன என்ற விவரங்கள் இல்லாமல் பட்டா வழங்கும் அரசாணையை அமல்படுத்த முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

court asks Religious and Charitable Endowments Department whether government pressurize them

Advertisment

சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த அரசாணை பிறபிக்கப்பட்டுள்ளதால், அரசாணையை ரத்து செய்யக்கோரி ராதா கிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆட்சேபம் இல்லாத அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்கள் அடையாளம் காணப்பட்டு, அதிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என கூறப்பட்டிருந்தது.

Advertisment

கோவில் நிலங்களைப் பொறுத்தவரை மாவட்ட வாரியாக, கோவில் வாரியாக கருத்துருக்கள் வகுக்கப்பட்டு, அறநிலையத்துறை ஆணையர் மூலமாக அரசுக்கு அனுப்பி அதன் பிறகே முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கோவிலுக்கு தேவைப்படாத நிலைங்களை ஏழை மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்தும் அந்த நிலத்துக்கான விலையை கோவிலுக்கு வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.ஏழை மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தும் நலத்திட்டத்திற்கான இந்த அரசாணை மத உணர்வுகளுக்கோ, பக்தர்களுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆஜராக கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "அரசு பிறப்பித்த அரசாணை ஒரு மதத்திற்கான வழிப்பாட்டு தளங்களுக்கு மட்டும்தான் பொருந்துமா? மற்ற மத வழிபாட்டு தளங்களுக்குக் கிடையாதா? என கேள்வி எழுப்பினர்.

இந்த அரசாணை மூலம் கோவில் நிலங்களை விற்க அறநிலையத் துறையை அரசு வற்புறுத்துகிறதா? இந்த அரசாணை எப்படி கோவில்களுக்குப் பலனை அளிக்கும்? இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அரசுக்கு ஊதுகுழலாகவும், ரிமோர்ட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் பொம்மைகளாகவும் தான் இருக்கிறார்கள்" என வேதனை தெரிவித்தனர்.

மேலும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 38 ஆயிரம் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் எவ்வளவு? அதில் ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்கள் தொடர்பான விவரங்கள் இல்லாமல் அரசாணையை அமல்படுத்த முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், அரசாணைக்கு தடை கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.