Skip to main content

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி: அரசு அடுத்து செய்ய வேண்டியது என்ன? -அன்புமணி ராமதாஸ்

Published on 08/01/2019 | Edited on 08/01/2019

இன்று ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பசுமை தீர்ப்பாய உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியளித்து. இது குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 

anpumani ramadoss

 

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மனிதர்களை கொலை செய்கிறது, சுற்றுச்சூழலை சீர்குலைக்கிறது என்பதற்கு ஏராளமான ஆதாரங்களும், சாட்சியங்களும் இருக்கும் போதிலும், அவை அனைத்தையும் கடந்து ஸ்டெர்லைட் தாமிர ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

 

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து கடந்த திசம்பர் 15-ஆம் தேதி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்திருந்தது. ஆனால், அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் ஆலையைத் திறக்க இடைக்காலத் தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை கடந்த திசம்பர் 22-ஆம் தேதி ஆணை பிறப்பித்தது. பசுமைத்தீர்ப்பாயத்தின் ஆணையை எதிர்த்து தமிழக அரசும், உயர்நீதிமன்றக் கிளையின் தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையும் தொடர்ந்த வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளது. இதன்மூலம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்திற்கு பின்னடைவாகும்.

 

 

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முதல் அதனால் அமைக்கப்பட்ட நீதிபதி தருண் அகர்வால் குழு வரை அனைத்தும் ஆலை நிர்வாகத்துக்கு சாதகமாகவே செயல்பட்டன. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் பரிசீலிக்கப்படவில்லை. மாறாக, ஆலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் நியாயப்படுத்தப்பட்டு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஒருதலைபட்சமான அறிக்கையின் அடிப்படையில் தான் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. அதைத் தான் உச்சநீதிமன்றமும் இப்போது உறுதி செய்துள்ளது. எனினும், இது இடைக்கால உத்தரவு தான். வழக்கு விசாரணையின்  முடிவில் தான் இறுதித் தீர்ப்பு வெளியாகும். இம்முடிவே இறுதித் தீர்ப்பாக வருவதற்கும் வாய்ப்புள்ளது.

 

 

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. ஸ்டெர்லைட் ஆலை தொடங்க 1994-ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் விதிக்கப்பட்ட எந்த நிபந்தனையையும் ஸ்டெர்லைட் ஆலை மதிக்கவில்லை.  கடந்த 2013-ஆம் ஆண்டு ஆலைக்கான அனுமதி புதுப்பிக்கப்பட்ட நாள் முதல் ஆலை மூடப்பட்டது வரையிலான ஐந்தாண்டுகளில் சுற்றுச்சூழலுக்கும், மனித குலத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஏராளமான விபத்துகள் ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்துள்ளன. அவற்றில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுக்காற்றை சுவாசிப்பதால் ஆயிரக்கணக்கானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

அதுமட்டுமின்றி, நீதிமன்றங்களையும், அரசையும் ஸ்டெர்லைட் ஆலை ஏமாற்றியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் உற்பத்தித் திறன் கடந்த 2006-ஆம் ஆண்டில் தினமும் 900 டன் என்ற அளவிலிருந்து 1200 டன் ஆக அதிகரிக்கப்பட்டது. இதற்கு தேவையான சுற்றுச் சூழல் பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க ஆலை வளாகத்தில் 172.17 ஹெக்டேர் நிலம் தேவை. ஆலையிடம் 102 ஹெக்டேர் மட்டுமே நிலம் இருந்த நிலையில், போதுமான நிலம் இருப்பதாகக் கூறி தமிழக அரசை  ஏமாற்றியது. சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்க்க 43 ஹெக்டேருக்கு பசுமைவெளி உருவாக்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், அந்த விதியை ஆலை மதிக்கவில்லை. 1200 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும் ஆலையில் புகைபோக்கி 123 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட வேண்டும். ஆனால், ஸ்டெர்லைட் ஆலையின் புகைப் போக்கி வெறும் 60 மீட்டர் உயரத்தில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால்  குடிநீர் மாசுபட்டிருப்பதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது. இவ்வளவுக்குப் பிறகும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. 

 

 

பாமக ஏற்கனவே கூறி வருவதைப் போல மத்திய அரசும், நீதிமன்றங்களும் இத்தகைய  பிரச்சினைகளை தொழில் வளர்ச்சி என்ற கோணத்தில் தான் பார்க்கின்றன. அதனால் தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தீர்ப்பு வெளிவருகிறது. தமிழ்நாட்டில் தாமிர ஆலைகளுக்கு அனுமதியில்லை என்று கொள்கை முடிவு எடுத்து, அதற்கு சட்டப்பாதுகாப்பு வழங்கும் வகையில் சட்டப்பேரவையில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றுவது மட்டும் தான் இதற்கு ஒரே தீர்வு ஆகும்.  இதை நீதிமன்றங்களும் ஏற்றுக் கொள்ளும். எனவே, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை சில நாட்கள் நீட்டித்தோ அல்லது இதற்காக சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியோ தனிச் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். என கூறியுள்ளார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.