Skip to main content

கடைகளுக்கு துணிப்பை கொண்டு வருவோர்க்கு சிறப்பு சலுகை! -நெகிழிக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து!

Published on 04/11/2019 | Edited on 04/11/2019

2018 டிசம்பர் முதல் 2019 அக்டோபர் வரை பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களுக்கு ரூ. 28,11, 900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மதுரை மாநகராட்சி தரப்பில்  உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

court about plastic use

 

 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி,  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில்,   ‘கடந்த ஜூன் 25 அன்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் நெகிழி பொருளுக்குத் தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மீறுவோர் மீது கடுமையான  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனை, அரசு ஜனவரி 1 முதல் நடைமுறைப்படுத்தியது. ஆனால், சில தினங்களுக்கு மட்டுமே நெகிழிக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நாளடைவில்,   சட்டத்திற்குப் புறம்பாக நெகிழியைப் பயன்படுத்துவது தொடர்ந்து வருகிறது . இதனால்,  விவசாயிகள் உற்பத்தி செய்யும் மூங்கில் பொருட்கள், பனை ஓலைப் பொருட்கள் போன்ற இயற்கை பொருட்களின் விற்பனை  நலிவடையத் தொடங்கின.   விவசாயிகளும் வாழ்வாதாரத்தை இழந்து கடனாளிகள் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும்,  நெகிழி பயன்பாட்டால்  சுற்றுச்சூழல் மாசடைவது  அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, நெகிழி பயன்பாட்டிற்குத்  தடைவிதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை முறையாக நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்று  குறிப்பிட்டிருந்தார்.  

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம்,தாரணி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது மதுரை மாநகராட்சி தரப்பில்,  ‘பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாகத்  தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2018 டிசம்பர் முதல் கடந்த அக்டோபர் மாதம் வரை 28 லட்சத்து 11 ஆயிரத்து 900 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது’  என்று தெரிவிக்கப்பட்டது.  அதற்கு நீதிபதிகள்,  ‘வாழையிலை பயன்பாட்டை ஊக்குவிப்பது, பை கொண்டு வருவோருக்கு சிறப்பு சலுகைகளை அறிவிப்பது, சுய உதவிக் குழுக்கள் மூலமாக துணிப்பைகளை விற்பது  போன்ற முயற்சிகளை முன்னெடுக்கலாம். ஆகவே இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரிகள் குழுவை நியமித்து, அது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.’ என மதுரை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

40 டன் பிளாஸ்டிக் பறிமுதல் - வியாபாரிகளுக்கிடையே தகராறு

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
30 thousand tons of plastic seized in Tiruvannamalai

திருவண்ணாமலை நகரில் சிவன்படவீதி என்கிற கருவாட்டுக்கடை தெருவில் பிளாஸ்டிக் மொத்தமாக விற்பனை செய்யும் குடோனில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன் நேரடியாக ஆய்வு செய்தார். வெளியே பார்க்க கடைபோல் இருந்தது, உள்ளே சென்றால் குறைந்த பட்ச காற்று வசதி கூட இல்லாமல் பாதாள குகைக்குள் போவதுபோல் சுத்தி சுத்தி போய்க்கொண்டே இருந்தது. உள்ளே பரந்துவிரிந்த குடோனில் பயன்படுத்தக்கூடாத வகையை சேர்ந்த பிளாஸ்டிக் கவர் பாக்கெட்டுகள் மூட்டை மூட்டையாக அடுக்கிவைக்கப்பட்டு இருந்ததைப்பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அதன் உரிமையாளர் என வந்தவர் கலெக்டரிடம், நான் ஜீ.எஸ்.டி கட்டிட்டு தான் இந்த பொருளை வாங்குறேன், அது எப்படி குற்றமாகும், இதை எதுக்கு பறிமுதல் செய்யறிங்க? என கேள்வி எழுப்பினாரர். நீங்க இந்த பொருளை எங்கயிருந்து வாங்கறிங்க? சேலத்தில் இருந்து என்று பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்வது சட்டப்படி தவறு. நீங்க இந்த பிளாஸ்டிக் வாங்கும் இடத்தின் முகவரியை சொல்லுங்க என்று கேட்டனர். அதற்கு, “தெரியாது, போன் செய்வேன் சரக்கு அனுப்புவாங்க சார்” என பல்டியத்தார். அட்ரஸ் தெரியாம எப்படி பொருள் வாங்கறீங்க? பணம் தர்றீங்க? ஜி.எஸ்.டி கட்டறதா சொல்றீங்க எனக்கேட்க பதில் சொல்ல முடியாமல் மழுப்பினார்.

30 thousand tons of plastic seized in Tiruvannamalai

நகராட்சி ஊழியர்களை வைத்து உள்ளிருந்த பிளாஸ்டிக் பொருட்களை குப்பை வண்டியில் ஏற்றி அனுப்பிக்கொண்டே இருக்க, வந்துகொண்டே இருந்தது. அந்த ஒரு குடோனில் இருந்து மட்டும் சுமார் 30 ஆயிரம் கிலோவுக்கு மேல் பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர். மாவட்டம் முழுவதும் 40 டன் பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நெகிழி என்கிற பிளாஸ்டிக் பறிமுதல் செய்யச்சென்ற கடைகள் மற்றும் குடோன்களில் காலாவதியான, பயன்படுத்த தகுதியற்ற உணவு பொருட்களான டொமோட்டா சாஸ், பாதாம், முந்திரி பாக்கெட்டுகள், திண்பண்ட பொருட்களும் இருந்தன. இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை வரவைத்து ஆய்வு செய்யச்சொன்னார் கலெக்டர். “நாங்க விற்கிறோம் மளிகை கடை, ஹோட்டல்காரங்க வந்து வாங்கிக்கிட்டு போறாங்க, அங்கயெல்லாம் ஏன் ரெய்டு போகல..” என வடநாட்டை சேர்ந்த அந்த முதலாளி கேட்க, அங்கிருந்த மற்ற வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் வியாபாரிகளுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

படங்கள் - எம்.ஆர். விவேகானந்தன்

Next Story

‘பிளாஸ்டிக் கவர்களில் உணவுப் பொருட்களை விற்கத் தடையில்லை’ - உயர்நீதிமன்றம் 

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
There is no ban on selling food items in plastic covers Madras High Court

தமிழகத்தில் பால், பால் பொருட்கள், பிஸ்கெட், எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்கத் தடையில்லை என விலக்களிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதனை மறுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை திரும்ப பெறப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை உறுதி செய்த உத்தரவை எதிர்த்து மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது.

அப்போது அத்தியாவசிய உணவுப் பொருட்களை அடைக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்களை தடை செய்யும் அரசாணையை முழுமையாக அமல்படுத்துவது சாத்தியமில்லாததால், அதை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிலையில், பால், பால் பொருட்கள், பிஸ்கெட், எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.