Skip to main content

வாழ்விலும் மரணத்திலும் இணைபிரியா தம்பதி...

Published on 12/09/2020 | Edited on 12/09/2020

 

The couple who were together in life and passed away

 

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ளது காசான்கோட்டை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 94 வயது சேது மணியன், இவரது மனைவி 88 வயது கமலம். இந்த தம்பதிக்கு 6 மகன்கள் உள்ளனர். அனைவருடனும் சந்தோஷமாக ஒன்றாக வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 70 ஆண்டுகள் ஆகிறது. 

 

இவர்களின் ஆறு மகன்கள், அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொடுத்து அவர்கள் பெற்ற குழந்தைகள், பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரப் பிள்ளைகள் என மூன்று தலைமுறையினருடன் சந்தோஷமாக இருந்துள்ளனர். 

இந்த நிலையில் வயது முதிர்வின் காரணமாக சேது மணியன் கடந்த 9ஆம் தேதி இறந்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை சேது மணியன் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. அப்போது உறவினர்கள் அனைவரும் அவரது மனைவி கமலத்தை அழைத்து வந்து சேது மணியன் உடல் அருகே அமர வைத்து சடங்குகளைச் செய்து கொண்டிருந்தனர். அப்போது கணவரின் உடலை பார்த்து அழுது கொண்டிருந்த கமலம் திடீரென மயங்கி சரிந்தார். பதட்டம் அடைந்த அவரது பிள்ளைகள் உறவினர்கள் அவரை தூக்கிச் சென்று ஒரு படுக்கையில் படுக்க வைத்தனர். பின்னர் சேதுமணியன் உடலை மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்தனர். அதன் பிறகு உறவினர்கள், வீட்டுக்கு வந்து மயக்க நிலையில் படுக்க வைத்திருந்த கமலத்தை எழுப்பியுள்ளனர். ஆனால், அவர் அசைவற்ற நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து அவரை  பரிசோதனை செய்தனர் அதில் அவர் இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. 


பின்னர் அவருடைய உடலுக்கு நேற்று காலை இறுதிச் சடங்குகள் செய்து கணவர் தகனம் செய்யப்பட்ட அதே மயானத்தில் கமலத்தின் உடலையும் தகனம் செய்தனர். திருமணமாகி 70 ஆண்டுகள் ஒன்றாக இணைபிரியாத ஒற்றுமையான தம்பதிகளாக வாழ்ந்து தன் குடும்பத்து பிள்ளைகளிடமும் அப்பகுதி மக்களிடையேயும் சந்தோஷத்தோடு வாழ்ந்துள்ளனர். சேது மணியன் கமலம் தம்பதிகள் வாழ்வில் இணைந்து சாவிலும் இணைபிரியாமல் சென்றதைக் கண்டு ஊர் மக்கள் அவர்களது மன ஒற்றுமையை, ஒருவர் பிரிவை ஒருவர் தாங்கி கொள்ள முடியாத மன உறுதியைக் கண்டு வியந்து போயுள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

Next Story

“வலி தாங்க முடியவில்லை” - மனைவி அடிப்பதால் கணவன் தற்கொலை முயற்சி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Husband try lost their life due to wife beating in Hyderabad

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே  வசித்து வருபவர் நாகேஷ். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நாகேஷ் திடீரென்று ஜெயப்பேரி பூங்காவில் இருக்கும் ஏரியில் தற்கொலை செய்வதற்காக இறங்கி உள்ளார். எனக்கும், என் மனைவிக்கும் விவாகரத்து வாங்கி கொடுங்கள் என்று கத்திக் கொண்டே ஏரியில் நாகேஷ் இறங்கி இருக்கிறார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  அங்கிருந்தவர்கள் நாகேஷை ஏரியை விட்டு வெளியேறுமாறு கூச்சலிட்டு உள்ளனர். ஆனால் நாகேஷ் ஏரியை விட்டு வெளியே வர மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நீண்ட நேரம் கழித்து அங்கிருந்த மக்களே ஏரியில் குதித்து  நாகேஷை மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.

பின்பு நாகேஷிடம் ஏன் தற்கொலை செய்ய முயற்சி செய்தீர்கள் என்று விசாரித்ததில், என் மனைவி என்னை தினமும் அடிக்கிறாள்; என்னால் வலி தாங்க முடியவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். என் குழந்தைகளிடம் கூட என்னை பேச அனுமதிப்பதில்லை. அவர்களிடம் அப்பா இறந்துவிட்டடாக கூறியிருக்கிறாள். அவள் என்னை சித்திரவதை செய்கிறாள். எனக்கும் என் மனைவிக்கும் விவகாரத்து வாங்கிக் கொடுங்கள். இல்லாவிட்டால் நான் இறந்து விடுவேன்” என்று வேதனையோடு கூறியிருக்கிறார். இதனை அங்கிருந்த ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இது வேகமாக பரவி வருகிறது.