Skip to main content

அரசு வேலை வேண்டுமா? - ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதி 

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

Couple arrested for defrauding rs 1 crore rupees by claiming get government jobs

 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள விழுப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன்(61). இவர் தனது நண்பர் ரஜினி என்பவர் மூலம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த புரட்சிக்கதிர் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு இருவரும் நண்பராகியுள்ளனர். இருவரும் அவ்வப்போது சந்தித்து உரையாடுவதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில், ஒருநாள் புரட்சிக்கதிர், அன்பழகனிடம், “எனக்குத் தெரிந்த நேந்திரம் கிள்ளைப்பகுதியைச் சேர்ந்த தீனதயாளன் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். அதனால் அவருக்கு உயர் அதிகாரிகளின் பழக்கம் அதிகமாக இருக்கிறது. அதன் மூலம் பலருக்கு அரசு வேலை வாங்கித் தந்துள்ளார். உனக்கு தெரிந்தவர்கள் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு நிச்சயம் வேலை வாங்கிக் கொடுப்பார். தீனதயாளன் வடலூரில் ஜெயம் என்ற பெயரில் ஐஏஎஸ் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். அதன் மூலம் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குப் பலரைத் தயார் செய்து அதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது” இப்படி தீனதயாளன் பற்றி ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்து கூறி அன்பழகனுக்கு ஆசை வலையை விரித்துள்ளார். 

 

இதனைத் தொடர்ந்து புரட்சிக்கதிரின் ஆசை வார்த்தைகளை நம்பிய அன்பழகன், தனது மகன் வினோத்திற்கு மின்வாரியத்தில் இளநிலைப் பொறியாளர் வேலை வாங்கித் தருமாறு புரட்சிக்கதிர் மூலம் தீனதயாளனைச் சந்தித்துக் கேட்டுள்ளார். தீனதயாளன், 25 லட்சம் ரூபாய் கொடுத்தால் அந்த வேலை கண்டிப்பாக மின்வாரியத்தில் கிடைக்கும். அதை நான் உறுதியாக வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து தீனதயாளனிடம், மகன் வினோத்துடன் சேர்ந்து, மகள் வித்தியாவிற்கு ஆசிரியர் வேலை என அவரது குடும்பத்தினரின் வேலை வாய்ப்புக்காக மொத்தமாக 55 லட்சம் ரூபாய் பணத்தை தீனதயாளன் மற்றும் அவரது மனைவி உஷா ஆகிய இருவரிடம் அன்பழகன் கொடுத்துள்ளார். இதையடுத்து சில மாதங்களில் புரட்சிக்கதிர் அரசு பணிகளுக்கான உத்தரவைப் போலியாகத் தயாரித்து அதை அன்பழகனிடம் கொடுத்துள்ளார். அந்த உத்தரவை எடுத்துக்கொண்டு வேலையில் சேர முயற்சி செய்தபோதுதான் மோசடி விவகாரம் குறித்து  தெரியவந்தது. 

 

இது தொடர்பாக அன்பழகன், கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜாராமிடம் சென்று புகார் அளித்தார். அவரது பரிந்துரையின் பேரில் கடலூர் மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார், தீனதயாளன் மற்றும் அவரது மனைவி உஷா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தீனதயாளனும் அவரது மனைவி உஷாவும் இணைந்து புவனகிரியைச் சேர்ந்த இளந்தமிழன் என்பவரிடம் ரயில்வே துறையில் வேலை வாங்கித்தருவதாக 13 லட்சமும், சிதம்பரம் வட்டம் அள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த மகா சங்கு என்பவரிடம் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சமும், அவரது மனைவி விமலா ரமணி என்பவரிடம் வருவாய்த் துறையில் இளநிலை உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக ரூ.6 லட்சமும், சுப்புலட்சுமி என்பவரிடம் ரூ.5 லட்சமும், மழவராயநல்லூரைச் சேர்ந்த தமிழ்மணி என்பவரிடம் ரூ.4 லட்சமும், ரூபா என்பவரிடம் ரூ.6 லட்சம் என  இப்படி அரசு வேலை வாங்கித் தருவதாக தீனதயாளனும் அவரது மனைவி உஷாவும் இணைந்து பலரிடமும் ஆசை வார்த்தை கூறி போலியான வேலை உத்தரவு வழங்கியும் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்து பணம் பறித்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

முன்னாள் பிரதமரின் பேரன் மீது பாலியல் புகார்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
complaint against the grandson of the former prime minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன. இந்நிலையில், எஸ்ஐடி விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். எனவே இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.