விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகிலுள்ள ஒழிந்தியாம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் சமத்துவபுரம் திறப்பு விழா, திண்டிவனம் அருகிலுள்ள சிப்காட் இடத்தில் செய்யாறு செஸ் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா உட்பட பல்வேறு விழாக்களில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து காரில் விழுப்புரம் வந்தார். இந்த விழாக்களில் மாவட்ட ஆட்சியர் மோகன், அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், பெரிய கருப்பன், தங்கம் தென்னரசு, பொன்முடி, திமுக தெற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி, எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சமத்துவபுரம் திறப்பு விழாவில் பயனாளி பெண் ஒருவரை ரிப்பன் வெட்டி சமத்துவபுரத்தை திறக்க வைத்தார் முதல்வர். நரிக்குறவர்கள் இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வீட்டு மனைப் பட்டா, சாதிச் சான்றிதழ், நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை விழா மேடையில் வழங்கினார். மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கிய முதல்வர் மேடையிலிருந்தபடியே புதிதாக கட்டப்பட்ட விழுப்புரம் நகராட்சி அலுவலகம் விக்ரவாண்டி திருவெண்ணைநல்லூர் வட்டாட்சியர் அலுவலகங்களையும் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். சுமார் 42 கோடி மதிப்பில் 10 ஆயிரத்து 722 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், “மும்பை கொல்கத்தாவில் மட்டும் இந்தியா இல்லை கிராமங்களிலும் அது இருக்கிறது. கிராமங்கள் வளர்ந்தால் தான் மாநில வளரும். மாநிலம் வளர்ந்தால் தான் நாடு வளரும். எனவே, மாநிலங்கள் வளர வேண்டும். இந்த நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும். சாதிகள் மதம் தான் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கிறது.
திமுக அரசு பதவியேற்ற 10 மாதங்களில் தமிழகத்தில் ஏராளமான நிறுவனங்கள் தொழில் தொடங்க வரத் தொடங்கியுள்ளன. அரசு அளிக்கும் ஊக்கத்தால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்துள்ளன. கலைஞர் ஆட்சியில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் துவக்கப்பட்டன. அப்படிப்பட்ட நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களுக்கு தற்போது நான் அடிக்கல் நாட்டி வருகிறேன். இதன் மூலம் தொழில் துறையில் முதலீடு அதிகரித்துக்கொண்டே வரும், இது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவது மட்டுமல்ல உற்பத்தியையும் மேம்படுத்தும். தமிழ்நாட்டில் வெளிப்படையான ஆட்சி நிர்வாகம் நடக்கிறது” என்று பேசினார்.
கொழுவாரியில் திறக்கப்பட்ட சமத்துவபுரம் பத்தாண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியின்போது 2 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் துவக்கப்பட்டது. அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அந்தப் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. தற்போது திமுக அரசு பொறுப்பேற்றது முதல், இந்த பணிகளை விரைந்து முடிக்குமாறு முதல்வர் உத்தரவிட்டதையடுத்து கூடுதலாக ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்து சமத்துவபுர கட்டிடப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.