Skip to main content

சொந்தச் செலவில் தார்ச்சாலை அமைத்த சுயேட்சை பெண் கவுன்சிலர்... குவியும் பாராட்டுகள்!

Published on 05/08/2020 | Edited on 05/08/2020

 

Tamilarasi arul

 

கொடுத்த தேர்தல் வாக்குறுதியைக் காப்பாற்ற, சொந்தச் செலவில் சுமார் 1 கி.மீ நிலம் வாங்கி சாலை அமைத்துக் கொடுத்துள்ளார் சுயேட்சை பெண் கவுன்சிலர்.

 

தேர்தலின் போது அரசியல்வாதிகள் கொடுக்கும் வாக்குறுதிகளை வெற்றி பெற்று வந்த பின்னர் மறந்து விடும் இந்தக் காலத்தில் பெரம்பலூர் அருகே சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒன்றியக்குழு உறுப்பினர் ஒருவர் தேர்தல் நேரத்தில் பொதுமக்கள் வைத்த கோரிக்கையை, அரசின் உதவியை எதிர்பார்க்காமல் தனது சொந்தப் பணம் 12 லட்ச ரூபாயை செலவு செய்து சாலை அமைத்து வருவது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

 

பெரம்பலூர் மாவட்டம் ஓலைப்பாடி ஊராட்சி ஒன்றியம் 9 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாக நின்று வெற்றிபெற்றவர் தமிழரசி. வாக்கு கேட்கும்போதே சாத்நத்தம் கிராம பொதுமக்கள் தங்கள் ஊரிலிருந்து விவசாய இடுப்பொருட்களை வாங்குவதற்கும், விற்பதற்கும் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதற்கும் வேப்பூருக்கு நன்னை வழியாகச் சுற்றி செல்ல வேண்டி இருப்பதால் குறுகிய நேரத்தில் செல்லும் வகையில் சாலை அமைத்துத் தருமாறு கோரிக்கை வைத்திருந்தனர்.

 

இந்நிலையில் கவுன்சிலராக வெற்றிபெற்ற தமிழரசி அந்த மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும் தேர்தலின் போது தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்காமல் தனது சொந்தச் செலவில் சாலை அமைக்கும் பணியினை தொடங்கியுள்ளார்.

 

அதற்காக சில விவசாயிகளிடம் தேவையான இடத்தைக் கிரையமாகப் பெற்று 20 அடி அகலத்தில் சுமார் ஒன்னேகால் கிலோ மீட்டருக்கு தனது சொந்தப் பணம் 12 லட்ச ரூபாயை செலவு செய்து சாலை அமைக்கும் பணியினை தொடங்கியுள்ளார். பணிகள் அனைத்தும் முடியும் பட்சத்தில் சாத்தநத்தம் கிராமமக்கள் 5 கிலோமீட்டர் பயணித்து வேப்பூர் செல்லும் நிலைமாறி தற்போது ஒருகிலோ மீட்டர் தூரத்திலே சென்றடையலாம். இதன் மூலம் அப்பகுதி மக்களில் சுமார் 100 ஆண்டுகள் கனவான குறுக்குவழி சாலை அமைக்கும் திட்டம் நிறைவேறியுள்ளது அப்பகுதி மக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. விரைவில் பணிகள் அனைத்தும் முடிவடைந்து சாலை மக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறக்கப்பட்டது. அதனை வேப்பூர் ஒன்றிய சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை திறந்துவைத்தார்.

 

சொந்த செலவில் இணைப்புசாலை அமைத்துத் தந்துள்ள பணியை மக்கள் பாராட்டி வரும் நேரத்தில் அவரிடமே கேட்டோம் இந்த எண்ணம் உங்களுக்கு எப்படி உதயமானது என்று,

 

"தேர்தலின்போது இந்தகவுன்சில் சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு ஓட்டு கேட்டு போகும் போது இணைப்பு சாலை திட்டத்தை என்னிடம் நிறைவேற்றி தருமாறு கோரிக்கை வைத்தனர். வெற்றி பெற்றால், அரசு உதவியைக் கூட எதிர்பார்க்காமல் இத்திட்டத்தை நிறைவேற்றுவது என்று முடிவு செய்திருந்தோம் அதேபோன்று என்னை மக்கள் வெற்றி பெற வைத்தனர். ஒன்றியக் குழு உறுப்பினராகப் பதவியேற்ற பிறகு சாலைப் பணியை நிறைவேற்றுவதற்கு கடும் முயற்சி செய்தேன். இதில் சம்பந்தப்பட்ட 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒவ்வொருவரிடமும் பலமுறை நேரடியாகச் பேசி அவர்களைச் சம்மதிக்க வைத்தோம். இடம் கொடுத்த சிலருக்குப் பணம் கொடுத்தோம் சிலருக்கு மாற்று இடம் வாங்கிக் கொடுத்தோம் இப்படிச் சாலைக்காக நிலம் வாங்கப்பட்டது. இந்தச் சாலை 21 அடி அகலமும் ஒன்றே கால் கி.மீ(1,300 மீட்டர்) நீளம் கொண்டது. சாலைப் பணி முடிந்து திறந்து வைத்த பிறகு இதைப் பயன்படுத்தும் எங்கள் கிராம மக்கள் மிகவும் சந்தோஷமாக மகிழ்ச்சியாக உள்ளனர். அதுவே எங்களுக்கு பெரும் சந்தோஷமாக உள்ளது இது மட்டுமல்ல கிராமங்களை இணைக்கவும் விவசாய நிலங்களுக்குச் சென்று வரவும் சுமார் மூன்றரை கிலோமீட்டர் தூரம் இரண்டு பேர் நடந்து செல்லக்கூடிய அளவுக்கு குறுகிய பாதையாக இருந்ததை இப்போது 10 அடி அகல சாலையாக மாற்றி சொந்தச் செலவில் புனரமைத்துள்ளோம். சொந்தமாக விவசாயிகளிடமிருந்து நிலம் வாங்கி அமைக்கப்பட்டுள்ள சாலையை ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் பத்திரப்பதிவு செய்து ஒப்படைக்க உள்ளோம் அதன் பிறகு அதைத் தார்ச்சாலையாக மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார் தமிழரசி அருள்.

 

இவரை முன் உதாரணமாகக் கொண்டு மற்ற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் இது போன்று செயல்பட்டால் கிராமப்புறங்களில் உள்ள பொது மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனே தீர்வு காணப்பட்டு மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறிவிடும் என்பதில் ஐயமில்லை. உள்ளாட்சியில் சிறந்த மக்கள் பிரதிநிதிகளில் தமிழரசி போன்றவர்கள் பலர் உருவாக வேண்டும். மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளார் தமிழரசி அருள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பெரம்பலூர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்” - அருண் நேரு உறுதி

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Arun Nehru assured will make Perambalur constituency role model

எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களைக் கொண்டு வந்து பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என்று திமுக வேட்பாளர் அருண் நேரு மக்களிடம் பிரச்சாரத்தின் போது உறுதியளித்தார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக அமைச்சர் கே.என். நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார். தொண்டர்கள், பொதுமக்கள் ஆதரவுடன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த அருண் நேரு துறையூர் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர் கிராமம் கிராமமாக சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். சென்ற இடமெல்லாம் அருண் நேருவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து திருச்சி லால்குடி தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடி ஒன்றியத்தில் 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாகச் சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி திமுக வேட்பாளர் அருண் நேரு வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அருண் நேரு பேசுகையில், “பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் அருண் நேருவாகிய நான் உங்களில் ஒருவனாக போட்டியிடுகிறேன். பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி, இந்த பாராளுமன்ற தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன்.

மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னின்று குரல் கொடுப்பேன். மக்களுக்காக பணியாற்ற காத்திருக்கும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வாய்ப்பு தாருங்கள்” எனப் பேசினார். பிரச்சாரத்தின் போது திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

“உங்கள் வீட்டு பிள்ளையாக செயல்படுவேன்” - அருண் நேரு உறுதி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
"I will act as your house son" - Arun Nehru assured

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழ்க முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குச் சேகரிக்க உள்ளார். அந்த வகையில் இன்று (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற  பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

முன்னதாக இந்த பொதுக் கூட்டத்தில் பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு பேசுகையில், “லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ள தி.மு.க.வில் என்னை வேட்பாளராக தேர்ந்தெடுத்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மனமாந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திருச்சியில் நடைபெற்ற மாநாடுகளை எல்லாம் ஓரமாக நின்று பார்த்திருக்கிறேன். பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியிருக்கும் இந்த கூட்டத்தின் மேடையில் நானும் ஒரு நாள் மைக் முன்னாள் நிற்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. இளைஞர்கள் பல்வேறு பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்ற அடிப்படையில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி இருக்கிறார்.

"I will act as your house son" - Arun Nehru assured

அதனைவிட முக்கியமாக தேர்தல் பரப்புரையை தொடங்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் முதன் முதலாக எனக்கு வாக்கு கேட்பது என் வாழ்நாளில் மறக்க முடியாத பெருமையாக இருக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் என் மீது எத்தகைய நம்பிக்கையை வைத்திருக்கிறார்களோ அதனை என் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவேன் என பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியிருக்கும் இந்த கூட்டத்தில் உறுதியளிக்கிறேன். கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழகம் பொற்கால ஆட்சியை கண்டிருக்கிறது. அதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் காரணம். இந்தியாவே முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியை அண்ணாந்து பார்க்கிறது. இத்தகைய தலைவரால் அடையாளம் கட்டப்பட்ட வேட்பாளராக இங்கு பெருமையாக நிற்கிறேன். பெரம்பலூர் தொகுதிக்கு தேவையான திட்டங்களை மத்தியில் அமைய இருக்கும் இந்தியா கூட்டணி ஆட்சி மூலமாக பெற்று தருவேன். நான் உங்கள் வீட்டு பிள்ளையாக செயல்படுவேன்” எனத் தெரிவித்தார்.