Skip to main content

“பஞ்சை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலுக்குள் கொண்டுவர வேண்டும்”  - கலைச்செல்வன் 

Published on 17/05/2022 | Edited on 17/05/2022

 

"Cotton should be included in the list of essential items" - Kalaichelvan

 

"இந்தியா உலக அரங்கில் முன்னேறி வருகிறது, தொழில் புரட்சியும், பொருளாதார வளர்ச்சியும் வேகமாக உயர்ந்து வருகிறது" என்று பிரதமர் மோடியும், அவரின் அமைச்சர்களும் பேசிவருகின்றனர். ஆனால், உண்மையில் நடுத்தர, சிறு, குறு தொழில் புரிவோர், அதில் ஈடுபடும் அனைவரும் விலையேற்றத்தால் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

 

இந்தியாவில் விளையும் பஞ்சை மூன்று நான்கு ரகமாக பிரித்து முதல் ரக பஞ்சு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இரண்டாம் மூன்றாம் தரமாக உள்ள பஞ்சை தான் நூலாக்கி இந்திய ஜவுளி உற்பத்திக்கு மத்திய அரசு கொடுக்கிறது. தற்போது அதையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, மீதி உள்ள பஞ்சை ஆன்லைன் வியாபாரமாக்கிவருகிறது. இதன் விளைவு ஒவ்வொரு நாளும் பங்கு சந்தை புள்ளிகள் உயர்வது போல விலை ஏற்றம் இருநூறு மடங்கு வரை கூடுதலாக மிக கடுமையாக உயர்ந்து விட்டது.

 

உதாரணத்திற்கு இன்று ஒரு லுங்கி அடக்க விலை 70 ரூபாய் என்றால் அது 100 ரூபாய்க்கு விற்பனையாகும். ஆனால் ஒரே நாளில் அடக்க விலை 200 ரூபாய் என்றால் அந்த லுங்கியை 300 ரூபாய்க்கு எப்படி விற்க முடியும்?
 


இந்நிலையில் பா.ஜ.க.அரசை கண்டித்தும், பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை குறைக்க வேண்டுமெனவும் ஈரோடு ஜவுளி வியாபாரிகள் 16, 17 என இரண்டு நாள் கடையடைப்பு போராட்டத்தை நடத்தினார்கள். இதனால்  ஈரோட்டில் 20 ஆயிரம் கடைகள் மூடப்பட்டன. சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள்.


ஈரோட்டில் மட்டும் ஒரு நாளைக்கு ரூபாய் இருநூறு கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. ஜவுளி உற்பத்தியாளர்களின் சங்கத் தலைவர் கலைச்செல்வன் நம்மிடம்,
"கடந்த 18 மாதங்களாக நூல் மற்றும் பருத்தி விலை ஏற்றத்தை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினோம். சில நாட்களுக்கு முன்பு பருத்தி மீதான இறக்குமதி வரி 11 சதவீதத்தை மத்திய அரசு வருகிற செப்டம்பர் 30 வரை மட்டுமே நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் பருத்தி இறக்குமதி செய்வது என்பது  45 அல்லது 60 நாட்கள் ஆகும். உள்ளூரில் கடந்த சில வாரங்களில் 40 நம்பர் நூல் விலை ரூபாய் 200 லிருந்து 400க்கும்,  30 ரகம் ரூபாய் 170 லிருந்து 340 எனவும்,  20 நெம்பர் ரகம் நூல் விலை 140 இருந்து 260 ரூபாய் என ஒரு கிலோவுக்கு உயர்ந்துள்ளது. 

 

356 கிலோ பீல் பஞ்சு விலை ரூபாய் 43 ஆயிரத்திலிருந்து திடீரென ரூபாய் ஒரு லட்சமாக உயர்ந்துள்ளது .இதனால் ஜவுளி உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில் குறிப்பாக குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் அங்கு செயற்கை இழை நூல் மற்றும் ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதனால் இதன் பாதிப்பு அங்கு எதுவும் தெரியவில்லை. ஆனால், தமிழகம் பருத்தி நூல் மற்றும் ஆடை உற்பத்தியில் தான் முன்னணியில் இருக்கிறது. எனவே இங்கு தான் அதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. இது சம்பந்தமாக மத்திய ஜவுளித் துறை அமைச்சரிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறுகிறார். 


பொதுவாக இந்தியாவில் உற்பத்தியாகும் பருத்தியை காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற நிறுவனம் கொள்முதல் செய்து நூல் மில்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் அதை அவர்கள் வட இந்திய வியாபாரிகள், புரோக்கர்களுக்கும் பஞ்சு வர்த்தகர்களுக்கும் வழங்குகிறார்கள். அவர்கள் ஆன்லைன் மூலம் பஞ்சின் விலை பல மடங்கு உயர்த்தி விடுகிறார்கள். மேலும்  இப்படி விலையை உயர்த்த வேண்டும் என்பதற்காக பஞ்சு பதுக்கலும் நடைபெறுகிறது. எனவே காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நேரடியாக பஞ்சை நூல் மில்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். பஞ்சு பதுக்கலை தடுக்க அத்தியாவசிய பொருட் சட்டத்தின்கீழ் பஞ்சை கொண்டு வரவேண்டும். 


சில நாட்களுககு முன்பு கோதுமையின் விலை உயர்ந்ததால் மத்திய அரசு அதன் ஏற்றுமதிக்கு தடை விதித்தது. ஏனென்றால் உணவுப் பொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோல் பருத்தியை கொண்டு வந்தால் பருத்தி மற்றும் நூல் விலையை முழுமையாக கட்டுப்படுத்தலாம். பொதுவாக நாட்டில் உற்பத்தியாகும் பருத்தி நூல் உற்பத்தி எவ்வளவு ஏற்றுமதி எவ்வளவு என்ற புள்ளிவிபரங்கள் கூட இந்த மத்திய அரசிடம் துல்லியமாக இல்லை. எனவேதான் தற்போது பிரச்சனை தோன்றியுள்ளது. நாட்டில் தற்போது 40 லட்சம் பேல் நூல் பற்றாக்குறை உள்ளது என்கிறார்கள். இதை மத்திய அரசு சரி செய்ய வேண்டும். இரண்டு நாள் கடையடைப்பு போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள 25 சங்கங்கள் பங்கேற்றுள்ளன. ஈரோட்டில் ஜவுளி டையிங் பிராசஸிங் போல்டிங் பேக்கிங் தொழிலாளர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

 

மத்திய அரசு நினைத்தால் பஞ்சு ஏற்றுமதியை தடை செய்வதோடு வட மாநில வியாபாரிகள், புரோக்கர்கள் பஞ்சு ஆன்லைன் வியாபாரம் செய்வதை தடை செய்யலாம் ஆனால் தமிழக நெசவாளனின் குரலை கேட்பதற்கு தயாராக இல்லை இந்த மத்திய அரசு என்பது தான் வேதனை" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.