Skip to main content

பஞ்சு, நூல் விலை உயர்வு.... ஈரோட்டில் ஜவுளிக்கடைகள் அடைக்கப்பட்டதால் ஜவுளிச் சந்தை வெறிச்சோடியது! 

Published on 17/05/2022 | Edited on 18/05/2022

 

Cotton and yarn prices go up .... Textile shops closed in Erode

மத்திய பா.ஜ.க. அரசு கார்பரேட் கம்பெனிகள், பெரு முதலாளிகளை வாழ வைக்கவும், நடுத்தர, சிறு, குறு தொழில் புரிவோரை அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையான மக்கள் விரோத செயல்பாடுகளைத் தொடர்ந்து செய்து வருவதைக் கண்டித்தும் வரலாறு காணாத வகையில் விலை ஏறியுள்ள நூல் விலையை குறைக்கக் கோரியும் ஜவுளி தொழிலில் ஈடுபடும் உழைக்கும் மக்களைக் காப்பாற்ற வேண்டியும் மத்திய அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

 

ஈரோடு மாவட்டத்தில் மே 16 மற்றும் மே 17- ஆம் தேதி என இரண்டாவது நாளாக ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அடுத்தகட்ட போராட்ட நடவடிக்கை குறித்து விரைவில் ஆலோசிக்கப்படும் என அறிவித்துள்ளார்கள்.

 

பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும். பருத்தியை அத்தியாவசிய பட்டியலில் சேர்க்க வேண்டும். பஞ்சு ஆன்லைன் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும். நூல் விலை உயர்வை உடனே குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் ஜவுளி உற்பத்தி, விற்பனை மற்றும் ஜவுளி சார்ந்த தொழிற்கூடங்கள் மே 16- ஆம் தேதி முதல் மூடப்பட்டன. 

Cotton and yarn prices go up .... Textile shops closed in Erode

ஈரோடு மாவட்டம் முழுவதும் 25 சங்கங்களைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் ஜவுளி மற்றும் சார்பு நிறுவனங்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் நாளொன்றுக்கு சுமார் 200 கோடி ரூபாய் அளவில் உற்பத்தி மற்றும் வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது என ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே இரண்டாவது நாளும் ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டன. 

 

ஸ்டிரைக் காரணமாக பன்னீர்செல்வம் பார்க்கில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடைபெறும் ஜவுளி சந்தை மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல ஈரோட்டில் ஜவுளி கடைகள் அதிகம் உள்ள ஈஸ்வரன்கோயில் வீதி, திருவேங்கடசாமி வீதி, டிவிஎஸ் வீதி, காமராஜ் வீதி, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. சென்னிமலை மற்றும் அந்தியூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் விசைத்தறி கூடங்கள் நூல் விலை உயர்வைக் கண்டித்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது. 

 

இந்த நிலையில், பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வைக் குறைக்க ஒரு வார காலத்திற்குள் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விலை உயர்வு தொடரும் பட்சத்தில் விரைவில் அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் தலைவர் கலைச்செல்வன் கூறினார்.

 

நூல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் மத்திய அரசின் தவறான கொள்கைகள் காரணமாக நூல் உயர்வை கண்டித்தும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்கக்கோரியும், ஈரோடு மாவட்ட விசைத்தறி மற்றும் பொது தொழிலாளர் சங்கம், ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவுத்தொழிலாளர் சங்கம் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் பேருந்து நிலையம் முன்பாக மே 17 - ஆம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. 

 

இந்த ஆர்பாட்டத்திற்கு விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தின் வட்டார தலைவர் ஆறுமுகம், கைத்தறி நெசவாளர்கள் சங்கத்தின் வட்டார செயலாளர் ரவி ஆகியோர் தலைமை தாங்கினர். ஏஐடியுசி மாநில செயலாளர் சின்னசாமி கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பபட்டது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓய்ந்தது பிரச்சாரம்; முடிவுக்கு வரும் தொழிலாளர் தட்டுப்பாடு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வாழை மஞ்சள் மற்றும் மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூ வகைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயக் கூலி வேலைக்கு மக்கள் அதிகம் சென்று வருகின்றனர். முன்னதாக பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் களைகட்டிய நிலையில் கட்சினர் தங்கள் பலத்தைக் காட்ட கூட்டத்தைத் திரட்டினர். இதனால் பவானிசாகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கூலி ஆட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. விவசாயக் கூலி வேலைக்கு செல்வோருக்கு தினக்கூலியாக ரூ.200 முதல் ரூ.350 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

காலையில் சென்று மாலை வரை வேலை செய்ய வேண்டும். ஆனால் தேர்தல் பிரசாரத்துக்கு காலையில் இரண்டு மணி நேரம் மாலையில் 2 மணி நேரம் சென்றால் போதுமானது. தினக்கூலியாக 300 ரூபாய் வரை கிடைக்கிறது. இதுபோக சிக்கன், மட்டன் பிரியாணி கிடைக்கிறது. குடிமகன்களுக்கு மதுவும் வாங்கி தரப்படுகிறது. இதனால் விவசாய கூலி தொழிலாளர் தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக பவானிசாகர் கிராமப் பகுதிகளில் கூலித் தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றதால் வரும் நாட்களில் தொழிலாளர் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை; மறுக்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Holiday with pay on polling day; Complaint can be filed if denied

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னயிலும், விசிகவின் தொல்.திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 'தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தல் நாளன்று தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், கட்டுமான பணியிடங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் பொருட்டு தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் வெளிமாநில தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவரவர் சொந்த மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நாளன்று தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அந்தந்த மாநிலங்களுக்கு முன்கூட்டியே செல்ல தொழிற்சாலை நிர்வாகம், செங்கல் சூளை நிர்வாகம் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் வேலை அளிப்பவர்கள் முழுமையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிர்வாகங்கள் தொடர்பான புகார்களைத் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர், ஈரோடு வினோத்குமார் செல் - 9994380605, 0424 - 22195 21, மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஈரோடு இணை இயக்குநர் சிவகார்த்திகேயன் செல்- 9865072749, 0424-2211780 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.