ADVERTISEMENT

குறிச்சிக்குளம் 9 ஆண்டுக்கு பின் நிரம்பியது;கரையோர மக்கள் அவசரமாக வெளியேற்றம்!

05:47 PM Aug 16, 2018 | arulkumar

கோவை குறிச்சி குளம் 9 ஆண்டுக்கு பிறகு நிரம்பி உபரிநீர் வெளியேறி நொய்யல் ஆற்றில் கலந்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், குறிச்சி குளக்கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

நொய்யல் ஆற்றின் வழியோரத்தில் உள்ள பிரதான குளங்களில் குறிச்சி குளம் முக்கியமானது. 370 ஏக்கரிலிருந்து 330 ஏக்கராக சுருங்கி போன இந்த குளத்தில் தண்ணீர் தேக்கினால் 15கி.மீ., சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரம். நான்கு ஆண்டுகளுக்கு முன் குறிச்சி குளம் நிரம்பியபோதும், உபரிநீர் வெளியேறவில்லை. கோவையில் பருவழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, மழை தொடர்ந்து பெய்து வருவதால் 9 ஆண்டுகளுக்கு பின் குறிச்சி குளம் முழு கொள்ளளவை எட்டி, உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இக்குளத்துக்கு புட்டுவிக்கியில் உள்ள குறிச்சி அணைக்கட்டில் இருந்தும், குறிச்சி குளத்திற்கு முன்னதாக உள்ள செங்குளத்தின் உபரிநீர் இடையர்பாளையம் பாலக்காடு சாலை அமைந்துள்ள வாய்க்கால் வழியாகவும் நீர் வரத்து உள்ளது.

ADVERTISEMENT

குறிச்சி குளத்தில் இருந்து சுண்ணாம்பு காளவாசல் பகுதியில் உள்ள குளத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையில் சிறிய அளவில் உடைப்பு ஏற்பட்டதிலிருந்து வெளியேறிய தண்ணீர் அருகே இருந்த வீடுகளுக்குள் புகுந்தது. தகவலறிந்து சென்ற மாநகராட்சி அதிகாரிகள், அந்த பகுதி மக்களுக்கு ஏற்கனவே குடிசை மாற்று வாரியத்தால் ஒதுக்கப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு உடனே செல்ல அறிவுறுத்தியுள்ளனர். மீதம் உள்ளவர்களுக்கு விரைவாக வீடுகளை ஒதுக்கவும், தற்காலிகமாக குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், அருகிலிருக்கும் தனியார் மண்டபத்தில் தங்கவும், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT