Skip to main content

மாணவ -மாணவிகள்  போராட்டத்தினால் நள்ளிரவில் சாதிச்சான்றிதழ் வழங்கிய கோட்டாட்சியர்!

Published on 16/03/2018 | Edited on 16/03/2018
school

   

    தோடர், கோத்தர், குறும்பர், பனியர், இருளர், காட்டுநாயக்கர் என தமிழகத்தில் 36 வகையான பழங்குடிச் சமூகத்தவர்கள் உள்ளனர். குடிமக்கள் மதிப்பீட்டின்படி தமிழகத்தில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட காட்டுநாயக்கர் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகிறார்கள். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டியினை சுற்றி கழுகுமலை, வானரமுட்டி, நாலாட்டின்புதூர், ஓட்டப்பிடாரம், எட்டயபுரம், எப்போதும்வென்றான் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரம் நபர்களும் ஒட்டு மொத்த மாவட்டத்தினைப் பொறுத்தவரை 4 ஆயிரம் நபர்களும் வாழ்கிறார்கள் என்பது மதிப்பீடு.!

 

      தங்களது சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் இனச்சான்று வழங்க கோரி அச்சமுதாய மக்கள் பலமுறை விண்ணப்பித்தும், சான்றிதழ் வழங்கப்படவில்லை.  மாவட்ட ஆட்சியர் அறிவுருத்திய பின்னரும், கிராமநிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் விசாரணை முடிந்த பிறகும், சான்றிதழ் வழங்கப்படாத காரணத்தினால், சான்றிதழ் கிடைக்கமால் காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள் சான்றிதழ் இல்லாமல் எவ்வித சலுகையும் பெறமுடியமால், வேலைவாய்ப்புக்கும், மேல் கல்விக்கும் செல்ல முடியாத நிலை உள்ளதால் உடனடியாக சாதிசான்றிதழ் வழங்க கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான டில்லிபாபு, சி.பி.எம். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அர்ச்சுணன் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்கள், பள்ளி மாணவ -மாணவிகள் சான்றிதழ் கிடைக்கும் வரை  கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்கள்.

 

   போராட்டத்தினைக் கைவிடக் கோரி கோட்டாட்சியர் அனிதா மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின்பும் உடன்பாடு ஏற்படவில்லை.  சான்றிதழ் கிடைக்கும் வரை போராட்டத்தினை கைவிட போவதில்லை என்றுத் தீர்மானமாக் கூறி தொடர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதையடுத்து மீண்டும் கோட்டாட்சியர் அனிதா, டி.எஸ்.பி.ஜெபராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். முதற்கட்டமாக 7 பேருக்கு நள்ளிரவில் சாதிச்சான்றிதழ் வழங்கினர். மேலும் விண்ணப்பம் செய்தவர்கள் மனுக்கள் மீது ஆய்வு செய்து தகுதியுள்ளவர்களுக்கு விரைந்து வழங்கப்படும் என்று உறுதியளித்தை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் போராட்டத்தினை கைவிட்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சான்றிதழ்களைக் கட்டணமின்றி பெற ஏற்பாடு; பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
Provision for getting flood victims' certificates free of charge

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. 

இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பலருடைய புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்கள் மழைநீரில் சேதமடைந்துள்ளது என்று பலரும் தங்களது வேதனையைத் தெரிவித்து வந்தனர். அதேபோல், மக்களின் பலருடைய முக்கிய ஆவணங்களான ஆதார் அட்டை, ரேஷன் அட்டை எனப் பல ஆவணங்கள் சேதமடைந்ததாகவும், மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கவலை தெரிவித்தனர். 

இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் சான்றிதழ்களை எந்தவித கட்டணமும் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை செயலர் கூறியுள்ளார். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ‘மிக் ஜாம்’ புயல் காரணமாகவும், தற்போது தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சரின் 09.12.2023 நாளிட்ட செய்திக் குறிப்பின்படி, மேற்காண் மாவட்டங்களில் கன மழையின் காரணமாக இழந்த மற்றும் சேதமடைந்த மதிப்பெண் சான்றிதழ்களின் (10th/ 11th/ 12th) இரண்டாம்படி நகலினை, மாணவர்கள் நலன் கருதி எவ்வித கட்டணமின்றி வழங்கிட அரசுத் தேர்வுகள் இயக்ககம் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

கன மழையில் 10th/ 11th / 12th மதிப்பெண் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலேயே, இரண்டாம்படி மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு எவ்வித கட்டமின்றி அவர்கள் பயின்ற பள்ளி மூலமாக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story

வெள்ளத்தில் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்கள் கவனத்திற்கு!

Published on 11/12/2023 | Edited on 12/12/2023
Those who lost their education certificates in the flood, attention

மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சேர்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதே சமயம் இந்த மழை, வெள்ள பாதிப்பினால், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகச் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் தங்கள் சான்றிதழ்களின் நகல்களைக் கட்டணமின்றி பெறுவதற்கு ஏதுவாக www.mycertificates.in என்ற இணையதளம் உயர் கல்வித்துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே மாணவ - மாணவிகள் தங்களின் இழந்த சான்றிதழ் பற்றிய விபரங்களை இணையதளம் வாயிலாக இன்றிலிருந்து (11.12.2023) பதிவு செய்யலாம். மாணவ, மாணவிகள் இணையதளம் வாயிலாகச் சான்றிதழ்களின் விபரங்களைப் பதிவு செய்த பின் அவர்களது மின்னஞ்சலுக்கு ஒப்புகை (Acknowledgement) அனுப்பப்படும்.

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்பட்டு, மாணவர்களுக்கு சென்னையில் வழங்கப்படும். மேலும், இணையதளத்தில் பதிவு செய்வது குறித்த சந்தேகங்களுக்கு தெளிவுபெற தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை 1800-425-0110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என உயர் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.