Skip to main content

ஊழலே உன் பெயர் தான் உயர்கல்வித் துறையா? உதவிப் பேராசிரியர் நியமன ஊழல் குறித்து விசாரணை வேண்டும்- ராமதாஸ்

Published on 04/10/2018 | Edited on 04/10/2018

பாமக நிறுவன தலைவர் ராமதாஸ், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடத்துள்ளதாகவும் அது தொடர்பாக விசாரணை வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

 

ramadas

 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மேட்டூர் உறுப்புக் கல்லூரியில் பத்தாண்டுகளுக்கும் கூடுதலாக பணியாற்றி வந்த தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் 15 பேருக்கு பணி நிலைப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் உரிய தகுதிகள் இருந்தும் கூட அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க அமைச்சர் தரப்பில் மிகப்பெரிய அளவில் கையூட்டு வசூலிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

 

 

மேட்டூர் உறுப்புக் கல்லூரியில் பணி நிலைப்பு வழங்கப்பட்டவர்கள் அனைவருமே 12 ஆண்டுகளுக்கு முன் முறைப்படி தகுதித் தேர்வு எழுதி தான் தேர்ச்சி பெற்றதன் அடிப்படையில் தான் தற்காலிக உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். என்றாவது ஒருநாள் நிரந்தர உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டால் தங்களுக்கு பணி நிலைப்பு செய்யப்படும் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் குறைந்த ஊதியத்தில் பணி செய்து வந்தனர். ஆனால், 2014-ஆம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக முனைவர் சுவாமிநாதன் இருந்த போது, தற்காலிக உதவிப் பேராசிரியர்களை நீக்கம் செய்து விட்டு, நிரந்தர உதவிப் பேராசிரியர்களை நியமிக்க முயன்றார். அதை எதிர்த்து தற்காலிக உதவிப் பேராசிரியர்களில் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, 2015- ஆம் ஆண்டில் சாதகமான தீர்ப்பைப் பெற்றனர். அப்போதே அவர்கள் பணி நிலைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். 

 

ramadas

 

ஆனால், அப்போதிருந்த துணைவேந்தர் சுவாமிநாதன் ஒரு பணியிடத்திற்கு ரூ.30 லட்சம்  கையூட்டு கொடுத்தால் மட்டுமே பணி நிலைப்பு செய்ய முடியும் என்று கூறி விட்டார். அதைத்தொடர்ந்து  நடந்த சட்டப்போராட்டங்களில் தற்காலிக உதவிப் பேராசிரியர்களுக்கு வெற்றி கிடைத்ததைத் தொடர்ந்து அவர்கள் பணி நிலைப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தரப்பு நியாயத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேலு முன்வந்த நிலையில், இதில் குறுக்கிட்ட உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் 15 தற்காலிக உதவிப் பேராசிரியர்களும் தலா ரூ.15 லட்சம் வழங்கினால் தான் பணி நிலைப்பு ஆணை வழங்க முடியும் என நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. நீண்ட பேரத்திற்கு பிறகு 11 பேர் தலா ரூ.15 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1.65 கோடி கையூட்டு வழங்கியதாகவும், மீதமுள்ள நால்வர் தங்களுக்கு நீதிமன்ற ஆணைப்படி தான் பணி நிலைப்பு வழங்கப்படுவதாகவும், அதற்காக பணம் தர முடியாது என்றும் கூறிவிட்டதாகவும் தெரிகிறது. அதைத் தொடர்ந்து அவர்களுக்கு பணி நிலைப்பு ஆணைகள் வழங்கப்பட்டு விட்ட நிலையில், அவர்களும்  தலா ரூ.15 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் தரப்பு மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.  

 

 

 பெரியார் பல்கலைக்கழகத்தின் மேட்டூர் உறுப்புக் கல்லூரி 12 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது ஆகும். மேட்டூரில் புதிய கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்று 2006-ஆம் ஆண்டில் அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவரும், பா.ம.க. தலைவருமான ஜி.கே.மணி கோரிக்கை விடுத்த போது, புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்குவதில்லை என்று பல ஆண்டுகளுக்கு முன்பே கொள்கை முடிவு எடுக்கப்பட்டு விட்டதாகக் கூறி அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. எனினும் அப்போதைய முதல்வர் கருணாநிதியுடன் பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஜி.கே.மணி தான்கடும் வாக்குவாதம் செய்து மேட்டூரில் பெரியார் பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரியை தொடங்க அனுமதி பெற்றார். அதன்பின் அரூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, எடப்பாடி ஆகிய இடங்களில் பெரியார் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடங்கப்பட்டன.

 

 

இத்தகைய சிறப்புமிக்க உறுப்புக் கல்லூரிகளில் இன்றையத் தேவைக்கு ஏற்ப புதியப் பாடப்பிரிவுகளைத் தொடங்கி அவற்றை விரிவு படுத்த உயர்கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தால், அது பாராட்டத்தக்கதாக இருந்திருக்கும். மாறாக உயர்நீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தி பணி நிலைப்பு ஆணை பெற்றவர்களிடம் கூட அதற்காக கையூட்டு தர வேண்டும் என்று கட்டாயப் படுத்தியதன் மூலம் உயர்கல்வித்துறையை உயர் ஊழல் துறையாக கே.பி.அன்பழகன் மாற்றி விட்டார்.

 

 

தமிழகத்தில் உயர்கல்வித்துறை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வரை தூய்மையானதாகவே இருந்தது. தமிழக பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தகுதியும், திறமையும் நிறைந்த கல்வியாளர்களின் கைகளில்  இருந்தன. அதனால் தமிழகத்தில் உயர்கல்வி வளர்ச்சியடைந்தது.. ஆனால், அண்மைக்காலங்களில் குறிப்பாக கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு தகுதியும், திறமையும் பின்னுக்குத் தள்ளப்பட்டு பணம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் துணைவேந்தர் பதவி என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது. அது தான் உயர்கல்வித்துறை வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. அதிலும் குறிப்பாக உயர்கல்வி அமைச்சராக அன்பழகன் பொறுப்பேற்ற பிறகு தனியார் பொறியியல் கல்லூரிகளில் தலித் மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கு தலா ரூ.10,000 கையூட்டு வாங்கும் அளவுக்கு உயர்கல்வித்துறை சீரழிந்து விட்டதாகக் குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. உயர்கல்வித்துறை  என்றாலே உயர் ஊழல் துறை என்று கூறும் அவலம் ஏற்பட்டுள்ளது.

 

 

உயர்கல்வித்துறையை சீரமைத்து அது இழந்த பெருமையையும், கவுரவத்தையும் மீட்டெடுக்க வேண்டியது அவசியமாகும். அதற்கான முதல் நடவடிக்கையாக உயர்கல்வித்துறைக்கு நேர்மையான, தூய்மையான ஒருவரை அமைச்சராக நியமிக்க வேண்டும். மேட்டூர் கல்லூரி பணி நிலைப்பு ஊழல் உட்பட  கடந்த இரண்டரை ஆண்டுகளில் நடந்த ஊழல்கள் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும். அத்துடன் அத்துறையின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.