Skip to main content

மதுரை மாநகராட்சி மருந்து கொள்முதலில் முறைகேடு: சேலம் மாநகர அலுவலர் உட்பட 6 பேர் மீது வழக்கு!

Published on 24/04/2021 | Edited on 24/04/2021

 

 

corruption in purchasing medicines for madurai corporation, case file against 6 including salem official

 

மதுரை மாநகராட்சியில் போலி ஆவணங்கள் தயாரித்து மருந்துகள் கொள்முதல் செய்ததாக சேலம் மாநகர் நல அலுவலர் உட்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

 

சேலம் மாநகராட்சியில் மாநகர் நல அலுவலராக பணியாற்றி வருபவர் பார்த்திபன். சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குடியிருப்பில் வசித்து வருகிறார்.

 

கடந்த 16ஆம் தேதி இவருடைய வீட்டில் சேலம் மற்றும் மதுரையைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் திடீரென்று சோதனை நடத்தினர். இந்த சோதனை குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது, "கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், மதுரை மாநகராட்சியில் சமூக ஆர்வலர் ஹக்கீம் என்பவர், ஆர்டிஐ சட்டத்தின் கீழ் சுகாதாரப்பிரிவு வரவு செலவுகளை ஆய்வு செய்துள்ளார். 

 

அதில், 6 லட்சம் ரூபாய் வரை தனியார் நிறுவனத்தின் பெயரில் போலி ரசீதுகள் தயாரிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து முழு விசாரணை நடத்தும்படி மாவட்ட ஆட்சியரிடம் ஹக்கீம் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் அந்தப் புகார் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்கு வந்தது.

 

இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் நடத்திய விசாரணயில், 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை தனியார் நிறுவனத்திடம் இருந்து மருந்துகள் கொள்முதல் செய்ததில் 88 லட்சம் ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது. 

 

இது தொடர்பாக, அப்போது மாநகராட்சியில் பணியாற்றி வந்த மாநகர் நல அலுவலர் சதீஷ்குமார், இப்போதைய சேலம் மாநகர் நல அலுவலரும், அப்போதைய மதுரை உதவி மாநகர் நல அலுவலருமான பார்த்திபன், கண்காணிப்பாளர் மாலினி, உதவியாளர் குணசேகரன், கணினி உதவியாளர் அப்துல் கரீம், அலுவலக ஊழியர் ராமமூர்த்தி ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

கடந்த 16ஆம் தேதி பார்த்திபன் வீட்டில் சோதனை நடத்தியபோது இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களின் வீடுகளிலும் சோதனை நடந்தது. இந்த முறைகேடு வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.” இவ்வாறு லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

மதுரையில் ‘தமிழ்க் கவிஞர் நாள்’ கொண்டாட்டம் - தமிழக அரசு தகவல்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Tamil Poet's Day' Celebration in Madurai - Tamil Nadu Government Information!

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்ப்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 133 ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக நாளை (29.04.2024) காலை 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் வழங்கும் கலை நிகழ்ச்சியோடு நிகழ்வு தொடங்குகிறது. தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் நோக்கவுரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமையுரை வழங்கவுள்ளார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் 'பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தமிழ் உணர்வே! சமுதாய உயர்வே' என்ற தலைப்பில் பட்டிமன்றமும், புலவர் செந்தலை கவுதமன் தலைமையில் 'பாவேந்தர் கண்ட படைப்புக்களங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கமும் முனைவர் சந்திர புஸ்பம் இசையரங்கமும் கவிஞர் நெல்லை ஜெயந்தா  தலைமையில் 'பாவேந்தரின் பார்வைகள்' என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெறவுள்ளது. மதுரை குரு மருத்துவமனையின் மருத்துவர் ச.கு.பாலமுருகன் நிறைவுரை வழங்கவுள்ளார். இந்நிகழ்வில் தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் அரசுப்பணியாளர்களும் தமிழார்வலர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் பாரதிதாசன். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் புரட்சிக்கவி என்றும், பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் ஆவார். தமிழாசிரியர், கவிஞர், திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் ஆவார்.