Skip to main content

சேலத்தில் கொசு மருந்து வாங்கியதில் ஊழல்; பேரூராட்சி உதவி இயக்குநர் உள்பட 4 பேர் மீது வழக்கு!

Published on 22/10/2020 | Edited on 22/10/2020

 

Corruption in the purchase of mosquito liquid in Salem assistant director of the municipality


சேலத்தில், கொசு மருந்து கொள்முதல் செய்ததில் பல லட்ச ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக வந்த புகாரின்பேரில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் உள்பட நான்கு பேர் மீது லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

சேலம், நாமக்கல் மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது. இங்கு திருஞானம் என்பவர் கடந்த 2014-2015- ஆம் ஆண்டில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்தார். மாவட்டம் முழுவதும் உள்ள 385 கிராம ஊராட்சி பகுதிகளிலும் நோய்த்தடுப்பு பணிகளுக்காக கொசு மருந்து அடிப்பது நடைமுறையில் இருந்து வருகிறது. இப்பணிகளுக்காக கொசு மருந்து வாங்கியதில் முறைகேடு நடந்ததாக அப்போது புகார் எழுந்தது.

 

அதன்பேரில், சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் முதல்கட்ட விசாரணை நடத்தினர். பேரூராட்சிகளின் இயக்குநரின் வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றாமலும், அவரின் அனுமதி பெறாமலும் கொசு மருந்து வாங்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, கொசு மருந்து கொள்முதல் செய்யப்பட்ட நிறுவனம் அங்கீகாரம் பெறாமல் இருந்ததும், தரமற்ற மருந்தை வாங்கியிருப்பதும் தெரியவந்தது.

 

இந்த விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே திருஞானம் வேலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். அங்கேயும் அவர் மீது இதேபோன்ற முறைகேடு புகார் எழுந்ததன்பேரில் அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

 

அதேபோல் சேலத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த செயல் அலுவலர் தர்மபுரிக்கு மாற்றப்பட்டு, அங்கு அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

 

இந்நிலையில், கொசு மருந்து கொள்முதலில் முறைகேடு குறித்த புகாரில் முகாந்திரம் இருந்ததை அடுத்து, உதவி இயக்குநர் திருஞானம், செயல் அலுவலர் நாகராஜன், இளநிலை உதவியாளர் ரஞ்சித்குமார், கெமிக்கல் நிறுவன உரிமையாளர் கோபிநாத் ஆகிய நால்வர் மீதும் மோசடி, போலி ஆவணங்களை தயாரித்தல், குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல் உள்பட 12 பிரிவுகளின் கீழ் சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் - அன்புமணி பங்கேற்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Ramdas, Anbumani participate in the BJP public meeting

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இத்தகைய சூழலில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் இன்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் கூட்டத்தின் போது பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க பா.ம.க. முக்கிய பங்காற்றும் என்று அன்புமணி பேசியதாகவும் கூறப்பட்டது.

இதனையடுத்து பா.ம.க. பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் நாடாளுமன்ற மக்களைவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து தெரிவிக்கையில், “பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. முடிவு செய்துள்ளது. இந்த முடிவை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சேர்ந்து எடுத்த முடிவு ஆகும். எந்தெந்த தொகுதிகள், வேட்பாளர்கள் விபரங்களை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பார். சேலத்தில் நடைபெற உள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை அன்புமணி ராமதாஸ் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி என்ற அறிவிப்பை நாளை (19.03.2024) காலை செய்தியாளர் சந்திப்பின் போது ராமதாஸ் அறிவிக்க உள்ளார். அதே சமயம் பா.ஜ.க. கூட்டணியில், பா.ம.க.வுக்கு தர்மபுரி, கடலூர், விழுப்புரம், சிதம்பரம், ஆரணி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், சேலம் மற்றும் மத்திய சென்னை உள்ளிட்ட 10 மக்களவைத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடத்தை வழங்க பாஜக முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் நாளை (19.03.2024) பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பா.ம.க. சார்பில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களான ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜி.கே. வாசன், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர். 

Next Story

பிரதமர் மோடிக்காக சேலத்தில் பிரம்மாண்ட ஏற்பாடு 

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Grand arrangement for Prime Minister Modi in Salem
கோப்புப் படம்

பிரதமர் நரேந்திர மோடி வரும் 19ம் தேதி சேலம் வருகிறார். சேலம், நாமக்கல், கரூர் தொகுதிகளை மையப்படுத்தி பரப்புரை செய்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. முக்கிய கட்சிகள் கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு தொடர்பான இறுதிக்கட்ட பேச்சவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. அதேநேரம், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டன. 

இந்நிலையில், முன்னெப்போதையும் விட இந்த தேர்தலில் தமிழகத்தில் கூடுதல் இடங்களைக் கைப்பற்றும் நோக்கில் பா.ஜ.க.வின் முக்கியத் தலைவர்கள் அடிக்கடி தமிழகத்தை வட்டமடித்து வருகின்றனர். குறிப்பாக, கொங்கு மண்டலத்தை குறி வைத்து பரப்புரை உத்திகளை வகுத்துள்ளனர். அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி கடந்த இரண்டரை மாதங்களில் தமிழகத்திற்கு நான்கு முறை சுற்றுப்பயணம் வந்துள்ளார். 

இந்நிலையில், வரும் 19ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சேலத்திற்கு வருகை தர உள்ளார். சேலம், நாமக்கல், கரூர் ஆகிய தொகுதிகளை மையப்படுத்தி பா.ஜ.க., கூட்டணி கட்சிகளை ஆதரித்து பேசுகிறார். இதற்காக, சேலம் - நாமக்கல் சாலையில் உள்ள கெஜல்நாயக்கன்பட்டியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு பா.ஜ.க. ஏற்பாடு செய்து வருகிறது. 

பொதுக்கூட்டம் மதியம் 2 மணியளவில் நடக்கிறது. கூட்டம் நடைபெறும் இடத்தை பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், சேலம் மாவட்டக் காவல்துறை எஸ்.பி. அருண் கபிலன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சேலத்தில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு, கேரளா மாநிலத்திற்கு பிரதமர் செல்ல உள்ளதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.