Skip to main content

மோசமான நிலையில் மாநகராட்சி பள்ளிகள்!; சேலம் மேயர் ஒப்புதல்! 

Published on 15/07/2022 | Edited on 15/07/2022

 

Corporation schools in bad condition !; Salem mayor

 

சேலம் மாநகராட்சியின் கீழ் இயங்கும் பெரும்பாலான பள்ளிகளில் கட்டடம், கழிப்பறை, ஆய்வகம், நூலகம், சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என மேயர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

 

சேலம் மாநகராட்சி கல்வி நிலைக்குழு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி மைய அலுவலகத்தில், வியாழக்கிழமை (ஜூலை 14) நடந்தது. மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் முன்னிலையில், மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இக்கூட்டம் நடந்தது.

 

சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 51 துவக்கப் பள்ளிகள், 29 நடுநிலைப் பள்ளிகள், 9 உயர்நிலைப் பள்ளிகள், 7 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 96 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டுதல், கூடுதல் வகுப்பறைகள், கணினி உபகரணங்கள், ஆய்வகம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 


இப்பணிகளை மாநகராட்சி நிதி மட்டுமின்றி பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி, என்.ஜி.ஓக்களின் நிதியுதவி, நமக்கு நாமே திட்டம் மற்றும் அரசின் சிறப்பு நிதி ஆகியவற்றின் மூலம் மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

 

கூட்டத்தில், மாநகராட்சி மேயர் ராமசந்திரன் கூறுகையில், ''சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளை ஆய்வு செய்தபோது, பெரும்பாலான பள்ளிகளில் கட்டடம், கழிப்பறை, நூலகம், சுற்றுச்சுவர், ஆய்வக வசதிகள் இல்லாதது தெரியவந்தது. பல இடங்களில் கட்டடங்கள் பராமரிப்பின்றி உள்ளன. பிரச்சனைகள் உள்ள பள்ளிகளில் உடனடியாக அடிப்படை வசதிகளை நிறைவேற்றி, புதுப்பொலிவு மிக்க பள்ளியாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்'' என்றார். 


மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, மாநகர பொறியாளர் ரவி, கல்வி நிலைக்குழுத் தலைவர் முருகன், குழு உறுப்பினர்கள் நா.பழனிசாமி, பி.எல்.பழனிசாமி, செயற்பொறியாளர் லலிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.