கரோனா விதிமீறல் காரணமாக தி.நகர் பனகல் பார்க் அருகே உள்ள குமரன் சில்க்ஸ் துணிக் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.
கரோனா தொற்று பரவலின் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் தொடர் ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு தொற்றுப் பரவல் சற்று குறைந்த காரணத்தினாலும், பொருளாதார காரணத்தினாலும் மத்திய, மாநில அரசுகள், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை பல கட்டங்களாக அறிவித்தது. மேலும், ஒவ்வொரு தளர்வுகளின்போதும் அவற்றுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் வழங்கிவந்தது. அதன்படி, ஜவுளிக்கடைகள் திறப்பின்போது, 'தனிமனித இடைவெளி', 'கட்டாய முகக் கவசம்', 'குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே வாடிக்கையாளர்'களை கடைக்குள் அனுமதிக்க வேண்டும் எனப் பல்வேறு விதிமுறைகளை அறிவித்தது.
தற்போது, சென்னை தி.நகரில் அமைந்துள்ள குமரன் சில்க்ஸ் கடையில், அரசு அறிவித்துள்ள கரோனா விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படாததால், கடைக்கு சீல் வைத்ததாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.