coronavirus vaccine chennai high court order health department

Advertisment

கரோனா தொற்று பரவாமல் தடுக்க தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, போடப்பட்டு வருகிறது. இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்கு, சுகாதாரப் பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றுவதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் மாற்றுத் திறனாளிகளையும் முன்னுரிமைப் பட்டியலில் சேர்க்க உத்தரவிடக் கோரி, சமூக நீதி முன்னேற்றத்துக்கான மையத்தின் இணை நிறுவனர் மீனாட்சி பாலசுப்பிரமணியன், பொதுநல மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘தனி மனித விலகல், முகக் கவசம் அணிவது போன்றவற்றைப் பின்பற்றுவதில் சவால்களைச் சந்திப்பதால், மாற்றுத் திறனாளிகளில் அதிகமானோர், இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். ஐம்பது வயதுக்குக் குறைவான, பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்னுரிமை அளித்த மத்திய அரசு, மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கத் தவறிவிட்டது. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் கரோனா தடுப்பூசி போட, மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இது சம்பந்தமாக, மத்திய அரசுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ எனப் புகார் தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய, மாநில சுகாதாரத் துறைகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தது.