பல்வேறு தரப்பினரும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வரும் நிலையில், அதில் ஒன்றாக புதுக்கோட்டையில், முதன்முதலிலாக ஓவியர்கள் இணைந்து பொதுமக்கள் அதிகம் கூடும் சாலையில் விழிப்புணர்வு ஓவியம் வரைந்தனர். அதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஓவியர்கள் அவர்களின் சிந்தனைக்கு ஏற்ப சொந்த செலவுகளில் ஓவியங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை – தஞ்சை மாவட்ட எல்லையான புளிச்சங்காடு கைகாட்டி என்பது மிகவும் முக்கியமான இடம் என்பதால் அதாவது பல மாவட்ட மக்களும் வந்து செல்லும் இடமாக இருப்பதால், ஆலங்குடி வட்டார ஓவியர்கள் சங்கம் இணைந்து தங்களின் சொந்த செலவில் “கரோனா வைரஸ், கருநாகம் போன்ற கொடிய விஷம் கொண்ட கண்ணுக்கு தெரியாத கிருமி” என்பதை அசத்தலாக வரைந்தனர். சாலையில் ஓவியர்கள், ஓவியம் தீட்டிக் கொண்டிருப்பதை பார்த்து ஆலங்குடி எம்.எல்.ஏ. மெய்யநாதன் ஓவியர்களை பாராட்டி சென்றார்.
இதுகுறித்து ஓவியர் சேரன் கூறும்போது, பிளக்ஸ் தொழிலுக்கு பிறகு ஓவியர்களின் வாழ்க்கை கண்ணீரோடுதான் போகிறது. ஏதோ கிடைக்கும் வேலைகளை செய்து பிழைக்க வேண்டியுள்ளது. இந்த நிலையிலும் நம் மக்களை காப்பாற்ற அரசுகள், அதிகாரிகள், போலீசார், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்பரவுப் பணியாளர்கள் இன்னும் பல துறையினருடன் தன்னார்வலர்களும் இணைந்து செயல்படும்போது, ஓவியர்களான நாங்கள் சும்மா இருக்க மனமில்லை. அதனால்தான் எங்களுக்கு தெரிந்த ஓவியங்களை தீட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இன்னும் கொஞ்ச நாட்கள் வீட்டில் இருந்தால் கரோனாவை விரட்டி அடித்துவிட்டு நாம் சுதந்திரமாக இருக்கலாம் என்றார்.