Skip to main content

பள்ளி தொடங்கிய 2 நாளில் மாணவிக்கு கரோனா! 70 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!!

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

coronavirus school students in salem district


ஆத்தூர் அருகே பள்ளிக்கூடம் திறக்கப்பட்ட இரண்டாவது நாளே ஒரு மாணவி, கரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

 

கரோனா வைரஸ் தொற்று காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் 24- ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதையடுத்து, அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன.

 

பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கூட, கல்வி நிலையங்களைத் திறப்பதில் அரசு தொடர்ந்து தயக்கம் காட்டி வந்தது. இந்நிலையில், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வைச் சந்திக்க வேண்டும் என்பதாலும், முக்கிய பொதுத்தேர்வை எழுத வேண்டும் என்பதாலும் முதற்கட்டமாக எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 மாணவர்களுக்கு மட்டும் ஜன. 19- ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

 

பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டன. வாரத்தில் 6 நாள்கள் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதோடு, வாரந்தோறும் மாணவர்களுக்கு உடல்நல பரிசோதனைகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

அரசு அறிவிப்பைத் தொடர்ந்து, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெரிய கிருஷ்ணாபுரத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளி திறக்கப்பட்டது. இங்கு 60- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கருமந்துறையைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர், பள்ளி விடுதியில் தங்கியிருந்து படித்து வருகிறார்.

 

அவர் கடந்த 19- ஆம் தேதியன்று கரோனா பரிசோதனை முடித்துவிட்டு வகுப்புக்கு வந்திருந்தார். பரிசோதனை முடிவுக்கு வியாழக்கிழமை (ஜன. 21) வெளியானது. இதில், அந்த மாணவிக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

 

இதையடுத்து உடனடியாக அந்த மாணவி, ஆத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

அவருடன் விடுதியில் தங்கியிருந்த 36 மாணவிகள் மற்றும் உடன் படித்து வந்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என மொத்தம் 70 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

பள்ளி திறக்கப்பட்டு இரண்டு நாளே ஆன நிலையில் மாணவிக்கு கரோனா பாதிப்பு இருப்பது, சுற்றுவட்டார ஊர்களிலும், பெற்றோர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.