ADVERTISEMENT

கரோனா பரிசோதனை மாதிரிகள் எடுப்பதற்கு லேப் டெக்னீசியன்கள் தகுதியானவர்கள்!- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

07:46 AM Jun 30, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்க லேப் டெக்னீசியன்களுக்கு தகுதி உள்ளது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

தமிழ்நாடு அரசு மருத்துவ லேப் டெக்னீசியன்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.கோபிநாதன் தாக்கல் செய்துள்ள மனுவில், கரோனா பரிசோதனைக்கு தொண்டை மற்றும் மூக்கிலிருந்து மாதிரிகளை எடுக்கும்போது காது, மூக்கு, தொண்டைக்கு சிகிச்சை அளிக்கும் இ.என்.டி. மருத்துவர்களையும், மருத்துவ மேற்படிப்பு பயிற்சி மருத்துவர்களையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனமும், மத்திய அரசும் விதிமுறைகள் வகுத்துள்ளது. மாதிரிகளை பரிசோதனை செய்து, முடிவுகளை வழங்குவது மட்டுமே லேப் டெக்னீசியன் பணியாகும்.

ஆனால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளைப் பின்பற்றாமல், லேப் டெக்னீசியன் மூலமாகவே மாதிரிகளை எடுக்க வற்புறுத்தப்படுகிறது. ப்ளஸ் 2- க்கு பிறகு, டிப்ளமோ மட்டுமே முடித்துள்ள லேப் டெக்னீசியன்கள், உடற்கூறியல் படித்தவர்கள் மட்டுமே செய்யக்கூடிய பணிகளைச் செய்யக்கூடாது என விதிகள் உள்ளன.

கரோனா சிகிச்சை வார்டுகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமே உரிய பாதுகாப்பு உடைகளுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், அங்கும் லேப் டெக்னீசியன்கள் சென்று பணிபுரியும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கவில்லை. மாதிரிகள் எடுக்க வகுக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரியும், லேப் டெக்னீசியன்களை பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்க லேப் டெக்னீசியன்களுக்கு தகுதி உள்ளது எனவும், கடமையைச் செய்வதில் இருந்து அவர்கள் தவறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மனுதாரர்கள் தரப்பில், மத்திய அரசு விதிகளின்படி, கரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை எடுக்க லேப் டெக்னீசியன்களைப் பயன்படுத்தக் கூடாது. தகுதியில்லாத நபர்களைக் கொண்டு கரோனா பரிசோதனை செய்யலாமா? இ.என்.டி மருத்துவ மேற்படிப்பு நிபுணர்கள் தான் தகுதியானவர்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது என வாதிடப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கில் மத்திய- மாநில அரசுகள் பதில் மனுக்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 1- ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT