Skip to main content

'கரோனா பீதியைத்' தவிர்க்க நேர்மறை சிந்தனை அவசியம்! -மனநல ஆலோசனை வழங்க பெரியார் பல்கலை ஏற்பாடு !!

Published on 04/04/2020 | Edited on 04/04/2020


கரோனா வைரஸ் பீதியால் உளவியல் சிக்கலில் உழன்று கொண்டிருப்போரை மீட்கும் வகையில் சேலம் பெரியார் பல்கலை மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தவிர்க்கும் வகையில், நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி மாலை முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.மக்கள் பொது இடங்களில் கூடுவது, தேவையின்றி நடமாடுவது தடை செய்யப்பட்டு உள்ளது. 

நோய்த்தொற்றில் இருந்து காத்துக்கொள்ள சமூக இடைவெளி கட்டாயம் என்று அறுவுறுத்தப்பட்டு உள்ளது.இதுபோன்ற கட்டுப்பாடுகளால் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் பலர், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
 

coronavirus salem periyar university arranged peoples counselling


மதுரையில் ஒருவர் வீட்டில் அடைந்து கிடந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதும்,மற்றோர் இடத்தில் வீட்டில் அடைந்து கிடந்த விரக்தியில் மூதாட்டியை ஒருவரை கடித்தே கொன்ற சம்பவமும் நடந்துள்ளன. 

இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலையின் உளவியல் துறை, மனநல சிக்கலில் உழன்று கொண்டிருப்போருக்குத் தகுந்த உளவியல் ஆலோசனைகளை வழங்க முன்வந்துள்ளது. 

இதுகுறித்து பெரியார் பல்கலை துணைவேந்தர் குழந்தைவேல் கூறுகையில், ''கொரோனா வைரஸ் தொற்றாமல் இருக்க, சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும்.அதேநேரம், இதுபோன்ற செய்திகளை ஊடகங்களில் பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.இணையத்தளங்களில் தேவையற்ற நோய்க்குறிகள் சார்ந்த தகவல்களைத் தேட வேண்டாம்.கரோனாவால் பலியானவர்கள் குறித்த செய்திகளைச் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதும் தவிர்க்கப்பட வேண்டும். இதமான இசையைக் கேட்டு ரசிக்கலாம். 

வீட்டில் இருக்கும் இதுபோன்ற தருணங்களில் குழந்தைகளுடன் விளையாடலாம். அவர்களுக்கு கதைகள் சொல்லியும், அவர்களின் எதிர்காலம் குறித்தும் விவாதிக்கலாம்.நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க அனைவரும் சரியான முறையில் கைகளைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்கலாம். 

நேர்மறை சிந்தனைகளை வளர்த்தெடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.எதிர்மறையான சிந்தனைகள் உங்கள் உடலின் எதிர்ப்பாற்றலை குறைத்து விடும். 

மேலும் மனநல ஆலோசனைகள் பெற விரும்புவோர், உளவியல் துறை பேராசிரியர்களை காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை 94434 96299, 99946 20123, 80126 98558 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.