கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியர், பல்வேறு துறைச் சார்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஆய்வுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, "இந்தியாவிலேயே அதிக அளவு கரோனா பரிசோதனை செய்த மாநிலம் தமிழகம். கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதமும் தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது. சுய உதவிக் குழுக்களுக்கு 1,114 கோடி ரூபாய்க்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 1,554 பேருக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் அதிக அளவு தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கு அரசு உதவி செய்து வருகிறது. கடலூர் துறைமுகத்தில் விரைவில் வணிக கப்பல் போக்குவரத்து தொடங்கும். கரோனா பரவலைத் தடுப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன". இவ்வாறு முதல்வர் கூறினார்.