ADVERTISEMENT

'கபசுர கசாயம்' வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது!- உயர்நீதிமன்றம்!

10:43 AM Apr 04, 2020 | santhoshb@nakk…

கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவருக்கும் கபசுர கசாயம் வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று ஏற்படாமல் இருக்கப் பொதுமக்களுக்கு கபசுர கசாயம் வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனுவை வீடியோ கால் மூலமாக நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அப்போது, கரோனா நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க 'கபசுர கசாயம்' குடிக்க வேண்டும் எனச் சித்த மருத்துவர்கள் கருத்து தெரிவித்துவரும் நிலையில், இந்நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மட்டுமல்லாமல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாகப் பொதுமக்கள் அனைவருக்கும் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என மனுதாரர் வாதிட்டார்.

மேலும், கபசுர கசாயத்தின் பலன் குறித்து தற்போது பெரும்பாலானோருக்கு தெரிய வந்துள்ளதால், இந்தக் கசாயம் விற்பனை செய்யப்படும் நாட்டு மருந்துக் கடைகளை 24 மணி நேரமும் திறந்து இருக்க அனுமதிக்க வேண்டும் எனவும், இந்தக் கசாயத்தை தயாரிப்பதற்குத் தேவைப்படும் 15 மூலிகைகளைக் கொண்டு செல்லும் வாகனங்களை காவல்துறையினர் தடுக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

மனுதாரரின் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், கரோனாவைக் குணப்படுத்துவதற்கான மருந்தை ஆய்வு செய்ய சித்த மருத்துவர் கொண்ட நிபுணர் குழுவைத் தமிழக அரசு அமைத்துள்ள நிலையில்,பொதுமக்களுக்கு குறிப்பிட்ட மருந்தை வழங்க வேண்டும் எனத் தங்களால் உத்தரவிட முடியாது எனத் தெரிவித்தனர்.

மேலும், மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக அரசே முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT