ADVERTISEMENT

பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லாததால் மீதமுள்ள 35 சதவீத கட்டணத்தை வசூலித்துக்கொள்ள தனியார் பள்ளிகளுக்கு அனுமதி!

08:28 AM Nov 19, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் இந்த ஆண்டு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்பதால், 75 சதவீத கல்விக் கட்டணத்தில் மீதமுள்ள 35 சதவீத கட்டணத்தை வசூலித்துக்கொள்ள, தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக்கூடாது எனத் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, தனியார் பள்ளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ‘கடந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் 75 சதவீதத்தை வசூலித்துக் கொள்ளலாம். அதில், 40 சதவீத கட்டணத்தை செப்டம்பர் 30- ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மீதத் தொகையை, பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு வசூலிக்கலாம்" என கடந்த ஜூலை 17- ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

மேலும் "பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என இதுவரை எந்த அறிவிப்பும் இல்லாததால், 35 சதவீத கட்டணத்தை வசூலித்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். தொடர்ச்சியாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால், பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட இதர செலவுகளை சமாளிக்க சிரமம் ஏற்பட்டுள்ளது" எனத் தனியார் பள்ளிகள் தரப்பில் முறையிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதா என அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

"நீதிமன்றம் உத்தரவிட்டும், பல பள்ளிகள் 40 சதவீத கட்டணத்தைக்கூட இதுவரை முழுமையாக வசூலிக்கவில்லை. 6 லட்சம் மாணவர்கள், மாற்றுச்சான்று இல்லாமல் அரசு பள்ளிகளுக்கு சென்று விட்டனர். மேலும், ஆன்லைன் மூலம் வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வரும் நிலையில், சில மாணவர்கள் முதல் தவணை கட்டணமான 40 சதவீத கட்டணத்தைச் செலுத்தவில்லை என்றாலும், அவர்களைத் தொடர்ந்து வகுப்புகளில் சேர்த்து பாடங்கள் நடத்தப்படுகின்றன" என தனியார் பள்ளிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்த நீதிபதி, தனியார் பள்ளிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று 75 சதவீத கட்டணத்தில் மீதமுள்ள 35 சதவீத கட்டணத்தை, 2021 பிப்ரவரி 28-ம் தேதிக்குள் வசூலிக்கலாம் என, தனியார் பள்ளிகளுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார். மேலும், ‘இந்த தொகையை தவணை முறையில் வசூலிப்பது குறித்து பள்ளிகள் முடிவு செய்து கொள்ளலாம். முதல் தவணையான 40 சதவீத கட்டணத்தையும், 2019-20ம் கல்வியாண்டில் செலுத்த வேண்டிய நிலுவை கட்டணத்தையும் செலுத்தாத மாணவர்கள், மீதமுள்ள 35 சதவீத கட்டணத்தையும் சேர்த்து செலுத்த வேண்டும்.

மேலும், முழு கட்டணத்தையும் வசூலித்ததாக, தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு எதிரான புகார்கள் குறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரித்து நவம்பர் 27- ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்து, விசாரணையை மார்ச் 1- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT