Skip to main content

அள்ளிக்குவிக்கும் தனியார் பள்ளிகள்... கண்டு கொள்ளாத மாவட்ட கல்வித்துறை!

Published on 24/06/2020 | Edited on 24/06/2020

 

coronavirus lockdown privates schools parents

 

அடுத்து எப்பொழுது கல்விக்கூடங்கள் திறக்கும்..? என்பதனை அரசு அறிவிக்கும் முன்னரே, மாவட்ட கல்வித்துறையிலுள்ள சில அதிகாரிகளின் துணைக் கொண்டு புதிய கல்வியாண்டிற்கான (.?) மாணக்கர்கள் சேர்க்கையை துவக்கிய தனியார் பள்ளிகள், பழைய மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தையும் மிரட்டியே வசூலிப்பது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சிவகங்கை மாவட்டத்தினைப் பொறுத்தவரை சிவகங்கை கல்வி மாவட்டம் எனவும், தேவக்கோட்டை கல்வி மாவட்டம் எனவும் நிர்வாக ரீதியாக இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் ஒட்டு மொத்தமாக 206 அரசு பள்ளிகளும், தனியார் பள்ளிகளான மெட்ரிக் பள்ளிகள் சுமார் 60- ம், சிபிஎஸ்இ பள்ளிகள் 15- க்கு மேற்பட்டும் இயங்கி வருகின்றன. 

 

கரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 25 முதல் பொது ஊரடங்கு அறிவிக்கப்ப்ட்டு அனைத்து பள்ளிக்கல்வி நிலையங்களுக்கும் கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டது. நடைமுறையில் சில தளர்வுகளுடன் இருக்கும் இந்த ஊரடங்கில் பள்ளிக்கல்வி நிலையங்கள் திறப்பு எப்போது என்பது.? இன்று வரை அறிவிக்கப்படவில்லை. இதனிடையே அரசு அறிவிக்காதவரை பள்ளிக்கான கல்விக்கட்டணங்களை வசூலிக்கக் கூடாது. அதுவும் நிலுவையில் இருக்கும் கட்டணங்களைக் கூட வசூலிக்கக்கூடாது என அரசு அறிவித்ததோடு மட்டுமில்லாமல், கரோனா வைரஸின் வீரியத்தை உணர்ந்து பத்தாம் வகுப்பிற்கான தேர்வுகளை ரத்து செய்து ஆல்பாஸ் என அறிவித்தது.

coronavirus lockdown privates schools parents

 

ஆனால், அரசின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் தேவக்கோட்டை கல்வி மாவட்டத்திலுள்ள காரைக்குடி நகரிலுள்ள சில தனியார் பள்ளிகள், குறிப்பிட்ட நாளில் பெற்றோர்களை வரவழைத்து கரோனா காலத்து சமூக விலகலைப் பின்பற்றாமல் புதிய மாணாக்கர்களின் சேர்க்கையை நடத்திக் கல்லாக் கட்டி வருகின்றது. இதற்காக தினசரி செய்தித்தாளில் தங்களது பள்ளி விளம்பரங்களை வைத்து ஆள் பிடித்து வருவதும் காணக்கூடிய ஒன்றே.! இதே வேளையில், இந்த வருடத்திற்கான கட்டணம் இது.! உடனடியாக கட்ட வேண்டுமென உளவியல் ரீதியாக குறுந்தகவல் அனுப்பி பெற்றோர்களின் மனநிலையை சிதைக்கும் பள்ளிகளும் உண்டு.

 

"இந்த வகுப்பிற்கு இவ்வளவு பள்ளிக்கட்டணம்? இவ்வளவு,புத்தகக்கட்டணம்? என ஒவ்வொரு வகுப்பிற்கும் கட்டணத்தை நிர்ணயித்து எங்களின் மொபைல் எண்ணிற்கு வாட்ஸ் அப் மற்றும் குறுந்தகவல் மூலம் செய்தி அனுப்பி கட்டணத்தை செலுத்த கட்டாயப்படுத்துகின்றன பள்ளிகள். அரசு இன்னும் அறிவிக்கவில்லையே.. நீங்கள் கட்டணத்தை செலுத்தக் கூறுகிறீர்கள்.? எனக் கேள்வி எழுப்பினால். "இந்த வருசம் உங்க புள்ளை இங்க படிக்கலையா..? என உளவியல் ரீதியாக பயமுறுத்துகின்றனர். மாவட்ட கல்வித்துறையின் ஆசியில்லாமலா இது போன்று நடைபெறும்.?" என கேள்வி எழுப்புகின்றனர் பெற்றோர்கள்.

 

இதுக்குறித்து கருத்தறிய சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலு முத்துவைத் தொடர்பு கொண்ட போது, "ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பியுள்ளேன். மீறும் பள்ளிகள் மீது உடனடி நடவடிக்கை உண்டு." என்றார் அவர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Holiday notification for only 7 schools in Mayiladuthurai

மயிலாடுதுறை நகரில் நேற்று (02-04-24) இரவு மிகப் பெரிய சிறுத்தை ஒன்று தென்பட்டதையடுத்து சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை தென்பட்ட கூறைநாடு பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்று (02-04-24) இரவு  11 மணிக்கு  சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை நடமாட்டம் உள்ள கால் தடத்தை வைத்து சிறுத்தை சென்றதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, நள்ளிரவு முதல் வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் கையில் வலைகளுடன் தேடி வருகின்றனர். அதில், சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர். இதற்கிடையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள கூறைநாடு பகுதியில் உள்ள பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் என்கிற தனியார் பள்ளிக்கு அந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விடுமுறை இன்று (3.4.2024)  அளித்திருந்தார்.

இந்த நிலையில் சிறுத்தை அச்சுறுத்தல் காரணமாக மயிலாடுதுறை நகரில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை(4.4.2024) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு காவல்துறை, தீயணைப்புத்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.