
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, "அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 2,000 கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் மே 10ஆம் தேதி தொடங்கப்படும். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். மே 10ஆம் தேதி முதல் டோக்கன் தரப்பட்டு தினமும் 200 பேருக்கு நிவாரண நிதி வழங்கப்படும். ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாகச் சென்று ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணியை மேற்கொள்வர். டோக்கன் முறையாகத் தரப்படுகிறதா எனக் கண்காணிக்க துணை தாசில்தார் தலைமையில் குழு அமைக்கப்படும். அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே கரோனா நிவாரணம் வழங்கப்படும். 2.07 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை முறையாகச் சென்று சேரும்" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதிவரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், கரோனா நிவாரணமாக ரூபாய் 4,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் தவணையாக ரூபாய் 2,000 வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.