கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக, நான்கு வாரங்களில் பரிசிலீத்து முடிவு எடுக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியராகப்பணியாற்றியவர் தங்கலட்சுமி. இவர் கடந்த ஜூன் மாதம் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
'கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்கள், தொற்று பாதித்து உயிரிழந்தால், 50 லட்சம் ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும்' எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இழப்பீடு வழங்கக் கோரி, தங்கலட்சுமியின் கணவர் அருணாச்சலம் அரசுக்கு மனு அளித்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து, தமிழக அரசு அறிவித்த இழப்பீட்டை வழங்க, அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அருணாச்சலம் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு,நீதிபதி சரவணன் முன் விசாரணைக்கு வந்தபோது, இழப்பீடு கோரிய மனுக்கள் அரசுக்கு வந்துள்ளதாகவும், அந்தக் கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை நான்கு வாரங்களில் பரிசீலித்து முடிவு எடுக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.