Skip to main content

கரோனா பீதி... சிக்கன் கிலோ 30 ரூபாய்... கவலையில் வியாபாரிகள்!

Published on 12/03/2020 | Edited on 12/03/2020

சீனாவில் பரவ தொடங்கிய கரோனா வைரஸ் தொற்று தற்போது 110 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் இந்த வைரஸ் தொற்றினால் 1,09,400 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். 3800 பேருக்கு மேல்  உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 72 ஆக இருந்தது. 

coronavirus chicken rate very low shop owners feeling

அந்த வகையில் பிராய்லர் கோழி சாப்பிட்டால் கரோனா வருகிறது என்ற வதந்தியைப் பரப்பி விட்டார்கள். இதனால் பிராய்லர் கோழிகளின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அசைவ உணவகங்களில் கடுமையாக வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பிரியாணிக்கு பெயர் பெற்ற ஆம்பூர், வாணியம்பாடியில் சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி விற்பனை என்பது பெருமளவில் குறைந்துள்ளது. இதனால் சிக்கன், மட்டன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. மட்டனை விட சிக்கன் விலை மிக கடுமையான அளவில் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வாரம் வரை கிலோ 160 வரை விற்பனையான பிராய்லர் சிக்கன், மார்ச் 12ந்தேதி ஆம்பூரில் கிலோ 30 ரூபாய் என்கிற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
 

இந்த விலை என்பது மிகப்பெரிய நட்டம் தான். ஆனால் பிராய்லர் கோழிகளை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க முடியாது என்பதால் இந்த விலைக்கு விற்பனை செய்கிறோம் என்கிறார்கள் ஆம்பூர், வாணியம்பாடி பகுதி அசைவ விற்பனையாளர்கள். இதேநிலை தான் தமிழகம் முழுவதும் என்கிறார்கள் கறிக்கோழி விற்பனையாளர்கள். மருத்துவ ரீதியாக ஆடு, கோழி, மாடு, மீன் போன்றவற்றால் தான் கரோனா பரவுகிறது என உறுதியாகாத நிலையில் வதந்திகள் வேகமாக பரவியால் இப்படி அசைவத்தின் விலை வீழ்ச்சியடைய அதனை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.   
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

3 மாதங்களுக்குக் கோழி இறைச்சிக் கடைகளுக்குத் தடை!

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Ban on chicken shops for 3 months in andhra

ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிதிப்ப கிராமத்தில் பறவைக் காய்ச்சல் காரணமாக, அங்கு பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த பல்லாயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்துள்ளன. 

இதனையடுத்து, பறவைக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்கவும் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கவும் நெல்லூர் மாவட்ட ஆட்சியர் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர், பறவைக் காய்ச்சல் பரவி கோழிகள் இறந்த ஊரிலிருந்து 1 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் கிராமங்கள் மற்றும் நகரங்களில் மூன்று மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனைக்கு, மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டார். 

மேலும், அந்தப் பகுதிகளில் 3 மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனை கடைகளைத் திறக்கவும் தடை விதித்தும், ஒரு கி.மீ முதல் 10 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் பகுதிகளில் வெளியூர்வாசிகள் கோழி இறைச்சியை வாங்கிச் செல்ல 15 நாட்கள் தடை விதித்தும் உத்தரவிட்டார். 

Next Story

உயிரைப் பறித்த பழைய சிக்கன் குழம்பு!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
The old chicken broth that took the life away

அரியலூரில் கோழி இறைச்சி குழம்பை அடுத்த நாள் சூடு செய்து சாப்பிட்ட பொழுது சிறுமி ஒருவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது கூழாட்டுக்குப்பம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் - அன்பரசி தம்பதியினர். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சம்பவத்தன்று கோவிந்தராஜ் தான் புதிதாகக் கட்டவிருக்கும் வீட்டிற்கு அஸ்திவாரம் போடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதனையொட்டி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற அவர்கள் கோழிக்கறி எடுத்து வீட்டில் சமைத்துள்ளனர்.

மீதமிருந்த கோழிக்கறி குழம்பை பிரிட்ஜில் வைத்து மறுநாள் சூடு செய்து சாப்பிட்டுள்ளனர். அப்பொழுது பழைய கறிக் குழம்பை சாப்பிட்ட ஏழாம் வகுப்பு பயின்று வரும் இளைய மகள் இலக்கியாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து போனார். அதேபோல் பழைய கோழிக் கறி குழம்பை சாப்பிட்ட தந்தை கோவிந்தராஜ், தாய் அன்பரசி, சகோதரி துவாரகா ஆகியோரும் உடல் நலக்குறைவு காரணமாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தொடர்ந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பழைய சிக்கன் குழம்பு சாப்பிட்டு சிறுமி உயிரிழந்தது அந்தப் பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.