கரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், நோய் எதிர்ப்பு ஆற்றலை பெருக்கும் நோக்கில் சித்த வைத்திய மருந்தான கபசுரக் குடிநீர் அருந்தலாம் என மத்திய ஆயுஷ் நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. கபசுர சூரணத்தை, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக விநியோகிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல்கட்டமாக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவப் பிரிவில் வியாழக்கிழமை (ஏப்ரல் 2) முதல் கபசுர சூரணம் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. நபர் ஒருவருக்கு 10 மி.கி. சூரணம் வழங்கப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கபசுர சூரணம் கிடைக்கும். மாவட்டத்தில் உள்ள மற்ற அரசு மருத்துவமனைகளில் வெள்ளிக்கிழமை (ஏப். 3) முதல் விநியோகம் செய்யப்படும்.
இதுகுறித்து சேலம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் செல்வமூர்த்தி கூறுகையில், ''இந்திய ஆயுஷ் அமைச்சகம், நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்க சித்த மருந்தான கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர் ஆகியவற்றை பரிந்துரை செய்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் கபசுரக் குடிநீர் அருந்தலாம். கரோனா அறிகுறி இல்லாதவர்கள் நிலவேம்பு குடிநீர் குடிக்கலாம். கபம் தொந்தரவு உள்ளவர்கள் கபசுரக் குடிநீர், தாளிசாதி சூரணம், ஆடாதொடை, மணப்பாகு, திப்பிலி போன்றவற்றை அரசு சித்த மருத்துவமனைகளில் பெறலாம்,'' என்றார்.