சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 173 நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 2.21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 9000 ஐ கடந்துள்ளது. இந்த வைரஸால் இந்தியாவில் 223 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில் நேற்று கரோனாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உரையாற்றிய பிரதமர் மோடி, "மார்ச் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மக்கள் அனைவரும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிப்போம்" என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தமிழகத்தில் ஞாயிறன்று பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் ஓடாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேலும் ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கை அனைவரும் கடைப்பிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் கரோனாவுக்காக 100 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன என்றும் விடுமுறை விட்ட பிறகும் வெளி இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பது கவலையளிக்கிறது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் தேவையற்ற பயணத்தை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர், கரோனா உறுதியான 2வது நபரால் 163 பேர், 3வது நபரால் 94பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று சென்னையில் தெரிவித்தார்.