எந்த பேதமும் இல்லாமல் அழிவு ஒன்றே தனது ஆயுதமாக மனித குலத்தின் மீது பாய்ந்துள்ள கரோனா வைரஸ் தொற்று உலக வரலாற்றில் துயரமான பதிவாக அமைந்து விட்டது. இந்த வைரஸ் 175 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் இது வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவே வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்நிலையில் ஈரோட்டின் ரயில் நிலைய ஏரியாவான காளை மாட்டு சின்னம் கொண்ட ரவுண்டானாவை பார்த்த போது சோகத்துடன், எதிர்காலத்தைப் பற்றி அச்சமும் மனதில் பற்றிக் கொண்டது. காரணம் இரவு பகலாக மக்கள் கூட்டம் அலைமோதிய இந்த பகுதி இரண்டு நாட்களாக ஈ, காக்காய் கூட வந்து அமராமல் வெறிச்சோடி காணப்படுவதுதான். இதை பார்க்கும் போது அந்த ரவுண்டானா "ஒரு நாளைக்கு ஏறக்குறைய இரண்டு லட்சம் மக்கள் என்னை கடந்து செல்வார்கள் இப்போது யாரையும் பார்க்க முடியவில்லையே... இதற்கு காரணம் யார்?" என்று மனித குலத்திடம் கேள்வி எழுப்புவதைப் போன்று உள்ளது.
இந்த வைரஸூல் இருந்து மீண்டு உலகம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பது அனைவரது எண்ணமாக உள்ளது.