உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸால் 204 நாடுகளில், சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53,000-ஐ கடந்துள்ளது. இந்தியாவிலும் தற்போது வேகமாகப் பரவிவரும் இந்த கரோனா வைரஸ் 2000க்கும் மேற்பட்டோரைப் பாதித்துள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது. தமிழக அரசு கரோனாவை தடுப்பதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை, வீடு மற்றும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தி தமிழக அரசு கண்காணித்து வருகிறது. இந்நிலையில் சேலத்தில் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பி, தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் இருந்த 65 வயது நபர் உயிரிழந்துள்ளார். அவரின் மரணம் குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.