கரோனா வைரஸ் தாக்குல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், இந்தியாவின் ஊரடங்கு உத்தரவு அடிப்படை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதாக பாதித்துள்ளது. இதனால் அரசியல்வாதிகள் முதல் தொழில் அதிபர்கள் வரை தங்களால் ஆன உதவிகளை செய்து வருகிறார்கள். தமிழக அரசு ரேசன் கடைகளில் ஏப்ரல் மாதம் வழங்கப்படும் பொருட்கள் அத்தனையும் இலவசம் என்றும் கூடுதலாக 1000 ரூபாய் நிவாரண தொகையும் அறிவித்தது.
நிவாரண தொகை 1000 ரூபாய் கிட்டதட்ட அனைவருக்கும் கிடைத்த நிலையில் ரேசன் பொருட்கள் மக்களிடம் சென்றடைவதில் பெரிய தேக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு அதிரடியாக களத்தில் இறங்கி மக்களுக்காக பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் பாதுகாப்பு சாதனங்கள் வழங்கினார்.
இதையடுத்து கரோனா சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் கருவிகள் வாங்குவதற்குத் தனது திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் வழங்கியதுடன், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள கலைஞர் அறிவாலயத்தை கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்திக்கொள்ள மாவட்ட கலெக்டரிடம் ஒப்புதல் கடிதம் வழங்கினார்.
இதையடுத்து கட்சியினர் கே.என். நேருவிடம், அரிசி இல்லாமல் மக்கள் வெகுவாக சிரமப்படுகின்றனர் என்ற கோரிக்கை வைக்க உடனே தனக்கு சொந்தமாக லால்குடியில் உள்ள அரிசி ஆலைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அரிசி ஆலையில் விற்பனையை உடனே நிறுத்துங்கள், அத்தனை அரிசி மூட்டைகளையும் தொகுதி மக்களுக்கு கொடுங்கள் என்று அதிரடியாக உத்தரவு போட்டார். உடனே ஆலையில் இருந்த அரிசி மூட்டைகளை எல்லாம் திருச்சி கலைஞர் அறிவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அதன் பிறகு திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களை வரவழைத்து அவர்கள் வார்டுகளில் எளியவர்களை அடையாளம் கண்டு குறைந்தது 1,000 பேர் முதல் அதிகபட்டமாக 1,500 பேர் வீதம் தலா ஒவ்வொருக்கும் 5 கிலோ வீதம் 35,000 பேருக்கு 1 லட்சத்து 50,000 கிலோ அரிசியை மொத்தமாக கலைஞர் அறிவாலயத்தில் அடுக்கி வைத்தார்.
முதல்கட்டமாக கலைஞர் அறிவாலயத்திலிருந்து திமுக பகுதி செயலாளர்கள், மற்றும் வட்ட செயலாளர்களை வரவழைத்து ஒவ்வொருத்தருக்கும் இத்தனை வீடுகள் என ஒதுக்கி, அவர்கள் அனைவரின் வார்டுகளுக்கும் உட்பட்டவர்களுக்கு 5 கிலோ அரிசி என தலா 2500 கிலோ ஒதுக்கி கொடுத்திருக்கிறார்கள். இந்த தொகுதியில் மட்டும் திமுவில் 34 வட்ட செயலாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு தொகுதி மக்களில் கிட்டதட்ட இந்த 35,000 பேருக்கு 40,000 லட்ச ரூபாய் மதிப்புள்ள அரிசிகளை தன்னுடைய சொந்த செலவில் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்த அரிசி மூட்டைகளை கட்சி பொறுப்பாளர்கள் ஏற்கனவே கணக்கு எடுத்து வைத்திருந்த எளிய மக்களிடம் நேரடியாக தனித்தனியாக ஒவ்வொரு பொறுப்பாளரும் கொடுத்தனர்.
ஆளும் கட்சிக்கும், ஆளும் கட்சியின் எம்.எல்.ஏக்களுக்கும், ஒரு எதிர்கட்சியின் எம்.எல்.ஏ. தன் தொகுதி மக்களுக்கு எப்படி செய்ய முடியும் என்பதை சொல்லாமல் செய்து காட்டி உள்ளார் கே.என்.நேரு.