Skip to main content

கடன் சுமை என்ற வைரஸ்... அரசுக்கு எடுத்துக் காட்டும் கம்யூனிஸ்ட் கட்சி!!!

Published on 12/06/2020 | Edited on 12/06/2020

 

 

  corona virus - lockdown - debt - TN Govt - Communist


"நுண் கடன் நிதி நிறுவனங்கள் கட்டாய வசூல் செய்வதால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதை உடனே கவனத்தில் எடுத்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமான நா. பெரியசாமி.
 


அவர் விரிவாக நம்மிடம் பேசுகையில், "உலக நாடுகளில் பரவி வரும் கோவிட் 19 நோய்ப் பெருந்தொற்று மிகப் பெரும் சவாலாக உள்ளது. நமது நாட்டில், குறிப்பாக தமிழ்நாட்டில் இந்தப் பெருந்தொற்று பரவல் தடுப்புக்காக பொது முடக்கம், ஊரடங்கு உத்தரவுகள், தொற்று நோய்கள் தடுப்புச் சட்டம் போன்றவற்றின் கீழ் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
 

  corona virus - lockdown - debt - TN Govt - Communist


சென்ற  மார்ச் 15 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் வரை சுமார் 80 நாட்கள் ஊரடங்கால் வேலையும், வருமானமும் இல்லாமல் மக்கள் வீடுகளில் முடங்கப்பட்டனர். தனிநபர் இடைவெளி, தனிமைப்படுத்திக் கொள்வது, விலகியிருப்பது போன்ற நடைமுறைகளால் உடல் உழைப்பு தொழிலாளர்கள், கிராமத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் , தையல், முடி திருத்தகம், சலவைக் கடைகள், செருப்புத் தைத்தல், கைத்தறி, விசைத்தறி, கட்டடக் கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் சாலையோரங்களில் வியாபாரம் செய்து வாழ்ந்து வரும் 'சுய வேலைவாய்ப்பு பெற்றோர்' போன்ற மிகப் பெரும் பகுதியினரின் வாழ்க்கை நிலைகுலைந்து போயுள்ளது.

ஊரடங்கு கால நெருக்கடிகளைச் சமாளிக்க அரசு சார்பில் குடும்பத்திற்கு தலா ரூபாய் ஆயிரம் ரொக்கம் கொடுக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரையிலான காலத்திற்கு தலா 5 கிலோ உணவு தானியம், சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட சில உணவுப் பண்டங்களும் ரேசனில் வழங்கப்பட்டது. இது சாவின் விளிம்பில் இருப்போருக்குச் சிறிதளவு உயிர் தண்ணீர் ஊற்றியது போல் தான்.

இதுதவிர வீட்டு வரி, தண்ணீர் வரி போன்றவைகள் 3 மாத காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே போல் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கடன் தவணைகளை  மூன்று மாத காலத்திற்கு வசூலிக்காமல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் வங்கிகளில் பெற்ற கடன் தவணைகளை 6 மாத காலத்திற்கு ஒத்தி வைத்து இந்த கால அவகாசம் மக்களுக்கு ஏதோ ஒரு சலுகை போல் வழங்கப்பட்டது. 
 


மக்களின் துன்ப துயரத்தைக் கடுகளவு அரசு புரிந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? இந்தக் கடன் தவணைகளை ஒத்தி வைத்தது மட்டும் கூடாது. கடன்களுக்கான வட்டித் தொகையை வங்கிகள் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். இதுதான் மக்களின் கோரிக்கை இந்தக் கோரிக்கையில் உள்ள நியாயத்தை நாட்டின் உச்சநீதி மன்றமும் ஆதரித்துக் குரல் கொடுத்துள்ளது. 

இந்த நிலையில் மத்திய அரசின் அறிவிப்பையும் , ரிசர்வ் வங்கியின் அறிவுரைகள் குறித்து ஒரு துளியும் கருத்தில் கொள்ளாமல் வங்கிகளும், நுண்கடன் நிறுவனங்களும் கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டு வருகின்றன என்பது தான் வேதனையான உண்மை. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கடன் வசூல் நடைமுறை இந்த கரோனா கால நெருக்கடிகளால் நிலைகுலைந்து நிற்கும் அப்பாவி ஏழைப் பொது மக்களை ஆத்திரமூட்டி வருகின்றது.

இதனால் பல்வேறு மாவட்டங்களில் பதற்றமும், அமைதியற்ற நிலையும் உருவாகியிருக்கிறது. உதாரணத்திற்கு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில், கடன் பெற்ற மக்கள் நிதி நிறுவனங்கள் வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக மாநில அரசின் அதிகாரிகள் முன்பு நடைபெற்ற அமைதி கூட்டத்தில், ஒப்புக் கொண்டபடி வங்கி அலுவலர்கள் நடந்து கொள்ளாமல் மீண்டும், மீண்டும்  கட்டாயக் கடன் வசூலில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்கள் மிரட்டப்படுகிறார்கள்.

ஆகவே அரசுக்கு நாங்கள் விடுக்கும் கோரிக்கை என்னவென்றால், தமிழ்நாடு முழுவதும் நுண் கடன் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் கட்டாயக் கடன் வசூலை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். கடன் வசூலுக்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் அறிவித்துள்ள கால அவகாசம் பயனாளிகளுக்குக் கிடைக்கச் செய்ய அந்தந்த அரசு நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும். 
 

http://onelink.to/nknapp


கரோனா கால நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு ஒரு வருட காலத்திற்கான வட்டித் தொகையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அசல் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை மேலும் 6 மாதங்கள் நீடித்து எளிய தவணைகளாக மாற்றியமைக்க வேண்டும். கொரோனா நோய்த் தடுப்பு கால நெருக்கடிகளைச் சமாளித்து, மறு வாழ்வையும், தொழிலையும் தொடங்க புதிய கடன் வழங்க வேண்டும். இது இந்த அவசர காலத்தின் தேவையாகும். ஆகவே தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை நாங்கள் கேட்டுக்கொள்வது, இதன் தொடர்பாக நிதித்துறை அதிகாரிகள், வங்கி மற்றும் வங்கிசார நிதி நிறுவனங்களின் முதன்மைச் செயல் அலுவலர்களை அழைத்துப் பேசி கடன் வசூல் துன்பநிலையிலிருந்து மக்களைக் காக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகள் தமிழக அரசு வழங்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கிறதோ அதேபோல் வறுமையால் கடன் பெற்று இப்போது வாழ்வாதாரம் இல்லாமல் இருக்கும் மக்களைக் கடன் சுமை என்ற வைரசிடமிருந்தும் காக்க வேண்டும்" என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
south indian artistes assoociation thanked tn government for new film city

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் கடந்த 19 ஆம் தேதி 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் சென்னை பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம் அமைப்பதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.  

தமிழக அரசு அறிவிப்பிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அதில், “சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தமிழ்த் திரைத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான திரைப்பட நகரம் குறித்த அறிவிப்பில், சென்னையை ஒட்டி பூந்தமல்லியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் வி.எப்.எக்ஸ். அனிமேஷன் மற்றும் எல்.இ.டி கன்வர்ஷன் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்பு தளங்கள், புரொடக்சன் பணிகள் பிரிவு, 5 நட்சத்திர ஓட்டல் வசதிகளுடன் கூடிய கட்டமைப்புகள் மற்றும் சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய சமூக கட்டமைப்பு வசதிகளுடன் திறந்தவெளி திரையரங்கம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது

தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் குறிப்பாகப் பெரிய படங்களின் படப்பிடிப்புகள் அண்டை மாநிலங்களில் நடப்பதால் இங்குள்ள நடிகர்கள் குறிப்பாகத் திரையுலக தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் குறைந்தன. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் நலம் வளம் பெறும். ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரும் சினிமா நகரமாக திகழ்ந்து, வரலாறு படைத்திட்ட நகரமிது. காலத்தில் கரைந்து போன அச்சரித்திரத்தை மீட்டெடுக்கும் திட்டமிது. தமிழ்த் திரைப்படங்களை உலக வரைபடத்தில் அழுத்தமாக பதிவதற்கு ஊக்கம் தந்து, படைப்பாளிகளின் கனவுலகத்தை மேலும் விரியச் செய்கின்ற திட்டமிது. தமிழ்த் திரையுலகின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.