ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோளிங்கர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் ஒருவர் இறந்ததை தொடர்ந்து அவரது இறுதி சடங்குக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இருந்து ஒரு மினி லாரியில் ஆண்கள், பெண்கள் என 40 பேர் சோளிங்கரை நோக்கி வந்துள்ளனர்.
அவர்களை ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இறுதி நிகழ்வில் கலந்துக்கொள்ள செல்வதாக தகவல் கூறினர். காவல்துறை அதிகாரிகள் அதனை ஏற்க மறுத்து வாகனத்தில் இருந்தவர்களை கீழே இறக்கிவிட்டு அந்த வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்தனர்.
கீழே இறக்கப்பட்ட பொதுமக்கள் அங்குள்ள ஒரு கடை நிழலில் அமர்ந்து அழுதுக்கொண்டு உள்ளனர். இறுதி காரியத்துக்கும் செல்ல முடியவில்லை, திரும்ப ஊருக்கு செல்ல போக்குவரத்தும் இல்லை என்பதால் என்ன செய்வது என இறந்தவரின் உறவினர்கள் இயலாமையால் அழுதுக்கொண்டு உள்ளனர்.
இறந்தவரின் உறவினர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் அந்த வாகனத்தை திருப்பி தந்து எங்களுக்கு உதவுங்கள் என மன்றாடி வருகின்றனர். அதிகாரிகளோ, 144 உத்தரவுப்படி கும்பலாக கூடக்கூடாது, ஒருயிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல கூடாது, வாகனம் செல்லக்கூடாது என்பது அரசாங்கத்தின் உத்தரவு நாங்கள் எதுவும் செய்ய முடியாது எனச்சொல்லியுள்ளனர்.
ஒருவர் இறந்தால் அவரின் இறுதி சடங்கில் 20 பேருக்கு மேல் கூட கூடாது என ஊரடங்கு உத்தரவின் விதியாக அரசாங்கம் கூறியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.