சென்னையில் நாளுக்கு நாள் கரோனாவின் ஆட்டம் அதிகரித்துள்ள நிலையில், போலீஸ்காரர்களுக்கு சுழற்சி முறையில் 7 நாட்கள் விடுமுறை அளிக்க ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
அதாவது, ஸ்டேசனில் 4 பேட்ரோல் வண்டி இருந்தால் 3 வண்டி இன்சார்ஜ் மற்றும் டிரைவர்களுக்கு விடுப்பு அளிக்கலாம். ஒரு பேட்ரோல் வண்டி மட்டும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். செக்டார் பார்ட்டிகளையும் குறைத்து அவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும். கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் பணியில் இருக்கும் போலீஸ்காரர்களுக்கு விடுப்பில் முன்னுரிமை அளிக்க உத்தரவிட்டுள்ளர். இதன்படி 4 மண்டலங்களிலும் போலீஸார்களுக்கு சுழற்சி முறையில் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் போக்குவரத்து போலீஸாருக்கு விடுமுறை அளிக்கப்பட்டதில் குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இதுகுறித்து போக்குவரத்து காவலர் ஒருவர் நம்மிடம், “ஏற்கனவே 50 வயதைக் கடந்தவர்களுக்கு ஆணையர் உத்தரவின் பேரில் 45 நாட்கள் விடுப்பு அளிக்கப்பட்டது. விடுப்பு முடிந்து தற்போது தான் அவர்கள் பணிக்குத் திரும்பி உள்ளனர். இந்நிலையில், மீண்டும் அவர்களையே விடுப்பில் அனுப்பி உள்ளனர். ஏற்கனவே பணியாற்றிய எங்களுக்கு விடுப்பு மறுக்கப்படுகிறது. இது என்ன நியாயம்? தெற்கு மண்டலத்தில் தி.நகர், அடையாறு, பரங்கிமலை இந்த 3 மாவட்டத்திலும் இதே மாதிரிதான் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. தயவு செய்து இந்த விஷயத்தை எங்கள் கூடுதல் கமிஷ்னர் கவனத்துக்கு காவல்நிலையத்தில் உள்ள அதிகாரிகள் கொண்டு சென்று விடுமுறை எடுக்காதவர்களுக்கு விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.