Skip to main content

கரோனாவும் காரைக்குடி ஊற்றும்! 

Published on 03/05/2020 | Edited on 03/05/2020
karaikudi


எந்தவித பிரதிபலனும் பார்க்காது அனைத்து மக்களுக்கும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து வரும் இயற்கை நீர் ஊற்றான காரைக்குடி சம்பை ஊற்று போல், நெருக்கடி காலங்களிலெல்லாம் மக்களின் துயர் தீர்த்து வருகின்றது மத்திய, மாநில அரசு ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்த காரைக்குடி ஊற்று எனப்படும் வாட்ஸ் அப் குழு! அதுவும், கரோனா தொற்றுக் காலத்தில் காரைக்குடி ஊற்று வாட்ஸ் அப் குழுவின் நிவாரணப் பணிகள் பிரம்மாண்டம் என்கின்றனர் பொதுமக்கள்.


 

 

karaikudi



உலகையே அச்சுறுத்திப் பலி கொள்ளும் கரோனா தொற்றுக் காலத்தில், கரோனா தொற்று மேலும் பரவாமல் இருக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு எளிய மக்களின் அன்றாடத் தேவையையே முடக்கிப் போட்டது. இவ்வேளையில், எளியோரின் அன்றாடத் தேவைகளை எதிர்க்கொள்ளும் விதமாக சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பெரு நகராட்சியில் வசிக்கும் சாலையோர முதியோர்கள், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் வசிப்போர்கள், அரசு மருத்துவமனை உள் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்கள், வட மாநில தொழிலாளர்கள், துப்பறவு தொழிலாளர்கள், துய்மைப் பணியாளர்கள், காவலர்கள், கோவிலில் படுத்துறங்கும் சாமியார்கள் மற்றும் இதுபோன்று எண்ணற்ற வீடு இல்லாதவர்களைக் கணக்கெடுத்து அவர்களுக்குத் தேவையான மதிய, மற்றும் இரவு உணவுகளை வழங்க முன்வந்தது காரைக்குடி ஊற்று எனப்படும் தன்னார்வலர்கள் கொண்ட வாட்ஸ் அப் குழு.
 

karaikudi



மதிய உணவு மட்டும் 135 நபர்களுக்கு 135 பார்சல் என்றளவில் 01.04.20 முதல் தொடங்கிய இவர்களின் சேவை தற்பொழுது மதிய உணவு. 532,  இரவு உணவு 110 எண்ணிக்கையளவில் பெருகி எளியோரின் இருப்பிடம் தேடி ஒவ்வொருவரிடமும் உணவு பார்சல் வழங்கப்பட்டு வருகின்றது. அது போல் 1000 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மாளிகை பொருட்களையும் வழங்க காரைக்குடி துணைச் சரகக் காவல்துறை இவர்களுக்கு தன்னார்வலர்கள் அடையாள அட்டை வழங்கியதோடு மட்டுமில்லாமல் பெரும் உந்து சக்தியாகவும் மாறியது. இதே வேளையில், இந்த காரைக்குடி ஊற்று வாட்ஸ் அப் குழு சேவையினைப் பாராட்டிய மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், சேவை மென்மேலும் தொடர ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும், சேதுபாஸ்கரா விவசாயக் கல்லூரி மூலம் பெற்ற 1 1/4 டன் எடையிலான அரிசியையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

h

சாதாரன வாட்ஸ் அப் குழு எளியோரின் தேவைகளை பூர்த்தி செய்து வருவது எப்படி.? "இந்த ஊரடங்கு காலத்தில் இச்சேவையை துவங்க உந்து சக்தியாக இருந்தது இரு பத்திரிகையாளர்களே! 2015ம் ஆண்டில் சென்னை மற்றும் கடலூரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது வெள்ள நிவாரணப் பணிகளில் முதலில் எங்களை ஈடுபடுத்திக் கொண்டோம். அப்பணி மனதிற்கு நிறைவினைக் கொடுக்க, 2016 ஆண்டு நடைப்பெற்ற சல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் 5000 பேருக்கு தினமும் உணவு வழங்கினோம். அதற்கடுத்து 2018 கேரள வெள்ள நிவாரணத்திலும், அதே ஆண்டில் கஜா புயலின் போது நிவாரணப் பணியாற்றினோம். அதன் பின் மத்திய அரசில் பணியாற்றிய அரசு சோமன், பொதுப்பணித்துறையில் பணியாற்றும் செந்தில்குமார், சேதுராஜன், இஸ்மாயில், நாராயணன், கோவிலூர் சரவணன், நசீர், மெய்யர், சபரி, கரோலின், மகாலெட்சுமி, மற்றும் வள்ளிச்சரண் உள்ளிட்ட 120 நபர்கள் ஒன்றிணைந்து 'காரைக்குடி ஊற்று' என பொதுவான பெயரிட்டு வாட்ஸ் அப் குழுவினை துவக்கினோம். குழுவாக துவங்கியவுடனே உடல் குளிர் சாதனப் பெட்டியை வாங்கி காரைக்குடி சுற்று வட்டார ஏழை எளிய மக்கள் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள வழி வகை செய்தோம். தற்பொழுது பல்வேறு இடங்களில் வசிக்கும் எளியோரைத் தேடி உணவுகளை வழங்க மட்டும் இதுவரை 60 களப்பணியாளர்கள் தன்னலம் பார்க்காதுப் பணியாற்றி வருகின்றார்கள். அதில் ஒரு மாற்றுத்திறனாளியும் அடக்கம். இதற்கான நிதிதேவையினை வழங்குவது காரைக்குடியில் வசிக்கும் அனைத்து மக்களே.!" என்கிறார் காரைக்குடி ஊற்று வாட்ஸ் அப் குழுவின் நிர்வாகிகளில் ஒருவரான ஜான்பால்.

 

இவர்களின் சேவைகளைப் பாராட்டி தங்களால் ஆன பெரும் உதவிகளை செய்து வருகின்றனர் சிவகங்கை மாவட்ட மக்கள். நாமும் பாராட்டலாமே..?

சார்ந்த செய்திகள்

Next Story

காரைக்குடியில் அமித்ஷாவின் ரோடு ஷோ திடீர் ரத்து!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Amit Shah's road show suddenly canceled in Karaikudi

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (12.04.2024) தமிழகம் வருகிறார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அமித்ஷாவின் பயணத்திட்டத்தின் படி நாளை சிவகங்கை மற்றும் மதுரையில் வாகனப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (13.04.2024) கன்னியாகுமரியில் பரப்புரையில் ஈடுபடுகிறார். இதனையடுத்து அன்று மாலை நாகப்பட்டினத்தில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும் தென்காசியில் நடைபெறும் வாகனப் பேரணியில் கலந்துகொள்கிறார். அதே சமயம் நாளை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்கிறார்.

இதன்படி சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் அமித்ஷா நாளை ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்த உள்ளார் என பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தேவநாதன் ரூ. 525 கோடி மோசடி செய்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டதும், சென்னையில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் நடத்திய ரோடு ஷோவுக்கு போதிய வரவேற்பு இல்லை என்ற விமர்சனமும் மக்கள் மத்தியில் எழுந்தது கவனிக்கத்தக்கது. 

Next Story

கெளதமியின் நில மோசடி வழக்கு; அழகப்பன் மீது குண்டாஸ்

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
 Kundas on Alagappan for Gauthami's land fraud case

நடிகை கௌதமி பாஜகவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் தனது ரூ. 25 கோடி மதிப்பிலான சொத்துகளை பாஜகவைச் சேர்ந்த அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து அபகரித்துவிட்டதாக மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில், “நான் திரைத்துறையில் சம்பாதித்த பணத்தின் மூலம் சில இடங்களில் நிலம் வாங்கினேன். கடந்த 2004 ஆம் ஆண்டு நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, எனது மகளின் பராமரிப்பு செலவுக்காகவும், எனது மருத்துவச் செலவுக்காகவும் அந்த இடங்களை விற்க முடிவு செய்தேன். அதற்கு பாஜகவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் அழகப்பன் என்பவர் உதவி செய்வதாக கூறினார். அதனால் எனது சொத்துகளை விற்கும் உரிமையை அவருக்கு கொடுத்தேன். அதற்காக என்னிடம் பல பத்திரங்களில் கையெழுத்து வாங்கினார். ஆனால் அதன் மூலம் போலி பத்திரங்களைத் தயார் செய்து, அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் எனது சொத்துகளை அபகரித்துவிட்டனர். இது குறித்துக் கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்” என்று குற்றம் சாட்டியிருந்தார். இதனிடையே, நடிகை கெளதமி பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்தார். 

இதையடுத்து கௌதமி கொடுத்த புகாரின் அடிப்படையில், பாஜக பிரமுகர் அழகப்பன், அவரது மனைவி நாச்சாள் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, சதீஷ்குமார் ஆகிய 5 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல நாட்கள் தலைமறைவாக இருந்து வந்ததால், மூன்றுக்கும் மேற்பட்ட தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர். மேலும் அவர்களின் இடங்களிலும் போலீஸார் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்கள் மற்றும் பணத்தை மீட்டனர். பின்பு லுக்கவுட் நோட்டீஸும் வழங்கப்பட்டது.

இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன் ஜாமீன் கோரிய நிலையில், அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீஸார், கேரளா திருச்சூருக்கு சென்று அழகப்பன், அவரது மனைவி நாச்சாள் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, கார் ஓட்டுநர் சதீஸ்குமார் ஆகியோரை கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்திருந்தனர். இதனையடுத்து, அழகப்பனை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. 

இந்த நிலையில், கெளதமியிடம் மோசடி செய்த அழகப்பனை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், சென்னையில் மட்டும் கடந்த 7 நாட்களில் அழகப்பன் மற்றும் வெவ்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என மொத்தம் 19 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.