Skip to main content

அவங்க தானே நாங்க... ஈழ ஏதிலியர்களுக்கும் கரோனா நிவாரணம்!

Published on 24/05/2020 | Edited on 24/05/2020

 

 

ஊரடங்கு என்பது அனைவருக்கும் பொதுவானது தானே.? அவர்கள் படும் கஷ்டம் எங்களுக்குத் தெரியாதா என்ன? அவங்க தானே நாங்க! என இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் ஈழ தமிழ் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியுள்ளனர் முகமறியா தொப்புள் கொடி தமிழர்கள்.

 

இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கிய வேளையில், தங்களுடைய இன்னுயிரைக் காக்க இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து எவ்வித பாதுகாப்புமின்றி நாட்டுப்படகுகளின் மூலம் இந்தியாவிற்குள்- தமிழகத்திற்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர். முதன் முதலில் 1983ம் ஆண்டு தமிழகம் நோக்கி அகதிகளாக வந்தவர்கள் தொடர்ந்து 1983-1987, 1989-1991, 1996-2003, 2006-2010 ம் காலக் கட்டங்களிலும் இந்தியாவிற்குள் வந்தார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இலங்கையிலிருந்து தப்பி வரும் ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டிற்குள் வந்தவுடன் முதலில் தங்க வைத்து பரிசோதிக்கப்படுவது ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மண்டபம் முகாமில். 
 

பின் அங்கிருந்து மாவட்டங்களிலுள்ள வெவ்வேறு ஈழத்தமிழர்கள் முகாமிற்கு முறையான பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டு தங்க வைக்கப்படுவர். குடும்பத்திற்கு தேவையான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும், மாதந்தோறும் உதவித் தொகைகளையும் வழங்கி வருகின்றது அரசு. எனினும், அதனைக் கொண்டு குடும்பம் நடத்த முடியாததால் கிடைக்கின்ற கூலி வேலைக்கு சென்று தங்களை தற்காத்துக் கொண்டு வருகின்றனர் இலங்கை அகதிகள் முகாமிலுள்ள ஈழத்தமிழர்கள்.
 

கரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், பலதரப்பட்ட தொழில்கள் முடங்கியது. இதில் கூலித் தொழிலாளிகளே முற்றிலும் பாதிக்கப்பட்டனர். இவ்வேளையில், எளியோர்களுக்கும், நலிவடைந்தோர்களுக்கும் நிவாரணப் பொருட்களும், உணவும் வழங்கினர் மனிதநேயமிக்க மனிதர்கள். 
 

ஆனால், புலம்பெயர்ந்து அகதிகள் முகாமில் வசிக்கும் ஏதிலியர்களின் நிலை பலருக்கும் தெரியவில்லை. இந்நிலையில், "நம்முடைய தொப்புள் கொடி உறவு தானே அவர்கள்" என 1990ல் துவக்கப்பட்ட சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் இலங்கை அகதிகள் முகாமிலுள்ள மொத்தம் 756 மக்கள் தொகையினைக் கொண்ட 245 குடும்பங்களுக்கான உருளை -1 கிலோ, கத்தரி - 1 கிலோ, தக்காளி - 1 கிலோ, சவ்சவ் - 1 கிலோ,  முட்டைகோசு-1கிலோ, பெரிய வெங்காயம் - 1 கிலோ, வாழைக்காய் - 1 சீப்பு, சீனி - 1/2 கிலோ, கோதுமை மாவு - 1/2 கிலோ, சோப்பு - 1, டீத்தூள் - 1 பாக்கெட், சேமியா - 1 பாக்கெட்  போன்ற அத்தியாவசிய நிவாரண பொருட்களை மரியதாஸ், தமிழக வாழ் இலங்கை தமிழ் ஏதிலியர் மன்ற குழு உறுப்பினர் மோகனதாஸ், சமூக ஆர்வலர் ஜான்பால் மற்றும் மரிய சோபியா ( உதவி பேராசிரியை ) திரு சிலுவை கல்லூரி - திருச்சி உள்ளிட்டோர் மூலம் வழங்க முன் வந்தனர் முகமறியா தொப்புள் கொடி உறவுகள், இதன் படி சனிக்கிழமையன்று மாலை வேளையில் ஒக்கூர் அகதிகள் முகாமிலுள்ள தேவலாயம் ஒன்றில் சமூக இடைவெளியுடன் கூட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக தேர்தல் அறிக்கை; ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. பின்பு பதிவான வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. ஆட்சியைத் தக்க வைக்கும் வகையில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இத்தகைய சூழலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி நேற்று (14.04.2024) வெளியிட்டார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு உருவாக்கிய இந்த தேர்தல் அறிக்கை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பாஜக தேர்தல் அறிக்கை குறித்துப் பேசுகையில், “எல்லா ஊர்களுக்கும் குழாய் மூலம் தண்ணீரே சென்று சேராத நிலையில், குழாய் மூலம் எரிவாயு எப்படிக் கொண்டு செல்ல முடியும். அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்வதாக பாஜக அளித்துள்ள வாக்குறுதி மிகப்பெரிய வேடிக்கையான செயல் ஆகும். பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டிக்கொடுத்துவிட்டதாக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது பொய்க் கணக்கு ஆகும். அதாவது 4 கோடி வீடுகளை கட்டி இருந்தால் 52 ஆயிரம் வீடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டி இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் பாஜக அரசு கட்டிக்கொடுத்த 52 ஆயிரம் வீடுகளைக் காட்ட முடியுமா?. 

 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

நாடாளுமன்றத்தில் 33 சதவித மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி இருந்தாலும் அந்த சட்டம் இப்போதைக்கு அமலுக்கு வராது. பெண்களுக்கான 33 சதவித இட ஒதுக்கீட்டை வேண்டுமென்றே பாஜக ஒத்திப் போட்டுள்ளது. அனைத்து ஊர்களுக்கும் புல்லட் ரயில் இயக்கப்படும் என்ற பாஜக வாக்குறுதி வேடிக்கையானது. ஒரு புல்லட் ரயிலுக்கு ரூ. 1.1 லட்சம் கோடி செலவு செய்யத் தயாராக உள்ள பாஜக அரசு, போதிய ரயில் விபத்து தடுப்புக் கருவிகளைப் பொருத்தாதது ஏன்?.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஏற்கெனவே உள்ள ஒன்றுதான். பழைய பல்லவிகளைப் பாடுவது புதிய சிந்தனை அல்ல. பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை. நாட்டில் 5% பேர் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஏற்க முடியாது. பாஜக தேர்தல் அறிக்கையில் மக்களை ஏமாற்றும் தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன” எனத் தெரிவித்தார். 

Next Story

காரைக்குடியில் அமித்ஷாவின் ரோடு ஷோ திடீர் ரத்து!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Amit Shah's road show suddenly canceled in Karaikudi

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (12.04.2024) தமிழகம் வருகிறார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அமித்ஷாவின் பயணத்திட்டத்தின் படி நாளை சிவகங்கை மற்றும் மதுரையில் வாகனப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (13.04.2024) கன்னியாகுமரியில் பரப்புரையில் ஈடுபடுகிறார். இதனையடுத்து அன்று மாலை நாகப்பட்டினத்தில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும் தென்காசியில் நடைபெறும் வாகனப் பேரணியில் கலந்துகொள்கிறார். அதே சமயம் நாளை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்கிறார்.

இதன்படி சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் அமித்ஷா நாளை ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்த உள்ளார் என பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தேவநாதன் ரூ. 525 கோடி மோசடி செய்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டதும், சென்னையில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் நடத்திய ரோடு ஷோவுக்கு போதிய வரவேற்பு இல்லை என்ற விமர்சனமும் மக்கள் மத்தியில் எழுந்தது கவனிக்கத்தக்கது.