Skip to main content

இரண்டு ஆயுள் தண்டனை கைதிகள் உட்பட 3 பேருக்கு கரோனா! 

Published on 27/05/2020 | Edited on 27/05/2020
coronavirus

 

கரோனோ நோய் பரவலை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு மே 31-ஆம் தேதிவரை நீடிக்கிறது. கடந்த வாரத்திற்கு முன்புவரை கோயம்பேடு காய்கறி சந்தையிலிருந்து வந்தவர்களால் கடலூர் மாவட்டத்தில் கரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. கடந்த வாரம் அதே வேகத்தில் நோயாளிகள் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். அதையடுத்து மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 432 ஆக இருந்தது. 


இந்த நிலையில் நன்னடத்தை காரணமாக சென்னை புழல் சிறைக்கு கடந்த 13-ஆம் தேதி தன்னார்வலர்களாக பயிற்சிக்கு 5 ஆயுள் தண்டனை கைதிகள் அனுப்பப்பட்டனர். பயிற்சிகள் முடித்து 22-ஆம் தேதி கடலூர் சிறைக்கு வந்த அவர்களுக்கு கரோனோ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் திண்டிவனம் பகுதியை சேர்ந்த 45 வயதுடையவருக்கும், கடலூர் முதுநகர் சுத்துக்குளம் பகுதியை சேர்ந்த 44 வயதுடையவருக்கும் நேற்று தொற்று  உறுதி செய்யப்பட்டது.  

இதன் காரணமாக சிறையில் உள்ள 680 கைதிகளுக்கும் கரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறையில் உள்ள காவலர்களுக்கும்,  கரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறை வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

 

 


இந்த 2 சிறைக்கைதிகளுடன் நேற்று இருவருக்கும், இன்று 3 பேருக்கும் தொற்று உறுதியானதால் கடலூர் மாவட்டத்தில்  மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 439 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 419 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.  

தற்போது மாவட்டத்தில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 19 பேர், கடலூர் அரசு பொது மருத்துவமனையில்  ஒருவர், புதுச்சேரி ஜிப்மரில் ஒருவர், சென்னை அப்பலோவில் ஒருவர், வீட்டு தனிமையில் ஒருவர் என 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் 

இந்நிலையில் கரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டவர்கள், தொடர்பில் தொடர்பில் இருந்தவர்கள் என 3,351 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 11,035 பேரின் உமிழ்நீர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 439 பேருக்கு கரோனா இருப்பதும், 10,437 பேருக்கு இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இன்னும் 159 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.