சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, ‘பயணம் துவங்கியது’ என்னும் தலைப்பில் எழுதியுள்ள கடிதத்தில், கரோனா வைரஸ் திருட்டுத்தனமாக நம்மை சூழ்ந்து கொண்டது. இந்த வைரஸை குறைத்து மதிப்பிட்டதால் பல வளர்ந்த நாடுகள்கூட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நடமாட்டமும், தொடர்பும்தான் இந்த வைரஸ் பரவக் காரணம். கண்ணுக்குத் தெரியாத எதிரியாக இருந்தால், நாம் மறைவாக இருப்பதே விவேகமானது.
லட்சுமண ரேகையை வரைந்து அதற்குள் அடைபட்டுக் கிடப்பதே அறிவுடைய செயல் ஆகும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம். மரணத்தை நேருக்கு நேர் சந்திக்கவேண்டாம். வெளியில் நடமாடுவதால் நமக்கு தெரியாமல் கரோனா வைரஸின் பலத்தை அதிகரிக்கிறோம். தனித்திருந்து பேரழிவைத் தடுக்க வேண்டும். தனித்திருப்பதை பாதுகாப்புக்கான பயிற்சி வாய்ப்பாக கருத வேண்டும். மனதை அடக்கி வெற்றி காண்பதற்கு, வேறெந்த வெற்றியும் ஈடாகாது.
கரோனாவுக்கு எதிரான போரில் அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பு கிடைத்தாலும், இனிவரும் காலங்கள் கடினமானதாகவே இருக்கும். கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் பாதி முடிந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறினாலும், மருந்து கண்டுபிடிப்பது என்பது இன்னும் சந்தேகமாகத்தான் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.