வேட்டி உடுத்தும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முழுக்கை சட்டையை முழங்கை வரை மடக்கிவிடுவது வழக்கம். கடந்த நவம்பரில் அமெரிக்கா சென்றபோதும்கூட, உடை அணிவதில் இதே பாணியைத்தான் பின்பற்றினார். சில நாட்கள், குளிருக்காக சட்டைக்கு மேல் ஓவர்கோட் போட்டிருந்தார். அப்போதும் வேட்டியை விடவில்லை. கடந்த ஜனவரியில் சபரிமலைக்கு யாத்திரை போனபோதும் அதே பாணிதான்.
உடை விஷயத்தில், இதுநாள் வரையிலும் தன்னை மாற்றிக்கொள்ளாமல் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை, இந்த கரோனா மாற்றிவிட்டது. தேனி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது, தனது முழுக்கை சட்டையை கை முழுவதும் மறையும் விதத்தில் அணிந்திருந்தார்.
சட்டையை மடக்கி விடாதது குறித்து ஓ.பி.எஸ்.ஸுக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம். “அதுவா? எல்லாம் கரோனா பீதிதான். காற்றுல பரவும்கிறாங்க. தும்மல்ல பரவும்கிறாங்க. கைகுலுக்கினா அம்புட்டுத்தாங்கிறாங்க. அதான்.. அண்ணன் ரொம்ப முன்னெச்சரிக்கையா இருக்காரு.”
தர்மயுத்தம் நடத்தியவரையே கரோனா மாற்றிவிட்டதே!