ADVERTISEMENT

முதலிலேயே அடிக்கிறாங்க... அப்புறம் தான் கேட்கிறார்கள்... ரொம்ப கஷ்டமா இருக்கு சார்... கண்ணீர் விடும் மக்கள்

07:54 AM Mar 28, 2020 | rajavel

ADVERTISEMENT

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க வேண்டுமென்பதற்காக மத்திய அரசு இந்தியா முழுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. அது நேற்றோடு மூன்று நாள் கடந்துள்ளது. இந்த நிலையில் மிகவும் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருவோர் மீது போலீசார் அத்துமீறிவதாக புகார்கள் எழுந்துள்ளது. முக்கிய இடங்களில் நின்றுகொண்டு இருசக்கர வாகனத்தில் வருவோரைத் தடுத்து நிறுத்துவதோடு அவர்களைச் சாட்டையாளும் தடியாலும் அடிப்பது மேலும் அவர்களுக்குத் தண்டனை என்ற பெயரில் தோப்புக்கரணம் போடச் செய்வது இப்படிச் சட்ட விதி மீறல்களை போலீசார் செய்வதாக மனித உரிமை அமைப்பினர் புகார் கூறி வருகிறார்கள்.

ADVERTISEMENT

இந்த நிலையில் இன்று ஈரோடு அரசு மருத்துவமனை சிக்னலில் அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரிக்கும் போதே அடிக்க ஆரம்பித்தனர். சாட்டையால் அடித்தனர். அவர்களில் ஒருவர் சிறிது தூரம் வந்த பிறகு நம்மிடம் பேசினார்.



"சார் ரொம்ப அடிக்கிறாங்க சார்... நாங்க எதுக்காக வருகிறோம்..? 10 பேர் வண்டியில வர்றாங்க அதுல குறைந்தது எட்டு பேர் ரொம்ப தேவையான விஷயத்துக்கு தான் வருவாங்க. திமிரு புடிச்ச பசங்கள கண்டுபிடித்து அடிக்கிறது பத்தி பிரச்சனையே இல்லை. ஆனால் நான் எங்க அப்பா அம்மா இங்கிருந்து ஒரு அஞ்சு கிலோ மீட்டர் தள்ளி தனியாக இருக்காங்க அவங்களுக்குச் சாப்பாட்டுக்கு வழி இல்லை. வீட்டுல செஞ்சு கொண்டு போய்க் கொடுத்து விட்டு வருவோம். அதைச் சொல்வதற்கு கூட பேச விடாமல் அடிக்கிறாங்க. இன்னைக்கு மட்டும் இல்ல நேத்து அடிச்சாங்க நேத்து முந்தா நாள் அவங்க மூணு நாளா அடிச்சுகிட்டே இருக்காங்க. இன்னும் 17 நாள் இருக்கிறது எப்படி இதை தாண்டுவோமுனு தெரியல. நாங்க அரசாங்கத்துக்கு எந்தத் தொந்தரவும் பண்ணல. வீட்டில் தான் இருக்கிறோம். ஆனால் சாப்பாட்டுக்கு வழி ஒன்றுமில்லாமல் பெரியவங்க கஷ்டப்படுவாங்க. அதை ஏன் இவங்க தெரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க. நிறுத்தி விசாரித்து என்ன ஏதுன்னு கேட்டு அதற்குப் பிறகு சும்மா சுத்தற மாதிறி தெரிஞ்சு அப்போ அடிச்சா பரவாயில்லை. முதலிலேயே அடிக்கிறாங்க அப்புறம் தான் கேட்கிறார்கள். ரொம்ப கஷ்டமா இருக்கு சார். இன்னும் 17 நாள் எப்படித்தான் போகுமுன்னு தெரியல... என வேதனையில் கூறினார். அந்த இளைஞர். இப்படித்தான் தமிழகம் முழுக்க போலீசின் அத்துமீறல்கள் தொடர்ந்து நடந்து கொண்டே உள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT