சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குனராக இருந்த, 55 வயது மருத்துவர் மற்றும் ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இவர்களின் உடலை அடக்கம் செய்வதற்குப் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்ததற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்த விவகாரம் குறித்து ஏப்ரல் 28- ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா நோய்த் தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம் அல்லது தகனம் செய்வதைத் தடுத்தால் குறைந்தபட்சமாக ஓராண்டு முதல் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.